என் 'தெர்மாமீட்டர்' கணக்குப்படி மக்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளனர்.. ‘வாக்குக்கணிப்பு டாக்டர்’ லாலு
பாட்னா: நான் ஒரு வாக்குக்கணிப்பு டாக்டர், எனது அழுத்த மானியின் அளவீடு பாஜகவுக்கும், நிதீஷ்குமாருக்கும் எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
மாட்டுத்தீவன ஊழலில் கைதாகி சிறை தண்டனை பெற்றவர் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இதனால் தற்போதைய தேர்தலில் தான் நேரடியாக போட்டியிட இயலாத சூழலில் தனது மனைவி மற்றும் மகளை வேட்பாளர்களாக களமிறக்குகிறார் லாலு.
இந்நிலையில் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார் லாலு. அப்போது அவர் கூறியதாவது :-
பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றும், மீதமுள்ளவை ஆர்ஜேடி, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளத்துக்கு கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதைக்காட்டிலும், எல்லா தொகுதிகளிலும் பாஜகவே வெல்லும் என்று சொல்லியிருந்திருக்கலாம். பிகாரில் பாஜகவுக்கு அமோக வெற்றி வாய்ப்பு என வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளை தவறு.
நான் ஒரு வாக்குக் கணிப்பு டாக்டர். எனது அழுத்த மானியின் அளவீடு பாஜகவுக்கும், நிதீஷ்குமாருக்கும் எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.