ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சம்: லாலுவை தொடர்ந்து தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை 8 மணி நேரம் விசாரணை!
பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி நிறுவனருமான லாலு பிரசாத் யாதவிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது மகன், முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிடம் இன்று 8 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரயில்வே பணியிடங்களை வழங்க நிலம் லஞ்சமாக பெற்றார் என்பது வழக்கு. இதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக லாலு பிரசாத் யாதவ் நேற்று ஆஜரானார். பாட்னா அமலாக்கத்துறை அலுவலகத்தில் லாலு பிரசாத் யாதவிடம் சுமார் 10 மணி நேரம் தொடர்ச்சியாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று தேஜஸ்வி யாதவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தேஜஸ்வி யாதவிடம் சுமார் 8 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இந்த விசாரணைகள் தொடர்பாக ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா கூறுகையில், எதிர்க்கட்சிகளைக் கண்டு பாஜக மேலிடம் அச்சப்படுகிறது. மத்திய விசாரணை ஏஜென்சிகளை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது பாஜக. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறது பாஜக தலைமை என்றார்.
இதேபோல ஆர்ஜேடி மற்றொரு மூத்த தலைவர் சக்தி சிங் கூறுகையில், லாலு மீதான ஊழல் குற்றச்சாட்டு காலத்தில் தேஜஸ்வி யாதவ் மைனர் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் அவரை குறி வைத்து விசாரிக்கின்றனர் என்றார்.
ஆனால் பாஜக மூத்த தலைவரும் புதிய துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி, லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த போது மாட்டுத் தீவன ஊழலில் சிக்கினார். இதற்காக சிறை தண்டனை அனுபவித்தார். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வே பணிகளுக்கு நிலம் லஞ்சமாக பெற்றார். இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்துதான் ஆக வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications