வைஷ்ணவ தேவி கோயில் நிலச்சரிவு! தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர் உயிரிழப்பு! மனைவி கண் முன்பே பறிபோன உயிர்
டெல்லி: காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் செல்லும் பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர். இதற்கிடையே உயிரிழந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அரக்கோணத்தைச் சேர்ந்த அவர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த அவரது மனைவி அங்குத் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இருப்பினும், அங்குக் கனமழை பெய்யும்போது மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. எவ்வளவு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அங்கு நடந்தே வருகிறது.

திடீர் நிலச்சரிவு
கடந்த சில நாட்களாகவே ஜம்மு காஷ்மீரில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே இன்று திங்கள் காலை திடீர் கனமழையின் காரணமாக, காத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் பக்தர் உயிரிழந்தார்.. மேலும் 9 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "இந்த விபத்து காலை 8.50 மணியளவில் பங்கங்கா அருகே குல்ஷன் கா லங்கரில் நடந்தது. இது யாத்திரையின் தொடக்கப் புள்ளியாகும். பாரம்பரியப் பாதையில் குதிரைச் சவாரி செய்பவர்களும் இப்பகுதியை அடிக்கடி பயன்படுத்துகின்றனர்" என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு
இதற்கிடையே இதில் உயிரிழந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த குப்பன் சீனிவாசன்(70) என்பவர் தனது குடும்பத்துடன் வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரைக்குச் சென்றுள்ளார். இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலச்சரிவில் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில், அவர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீட்புப் பணிகள்
இது தொடர்பாக வைஷ்ணவ தேவி கோயில் வாரிய செயல் முதன்மை அதிகாரி சச்சின் குமார் வைஷ்யா பேசுகையில், "இந்தச் சம்பவத்தில் இருவர் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏழு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்" என்றார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள், காவல் துறை, பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
என்ன நடந்தது!
இது தொடர்பாக விபத்தில் காயமடைந்த நபர் கூறுகையில், "நான் முன்பதிவு அலுவலகத்திற்குள் இருந்தபோது, திடீரெனக் கற்கள் விழ ஆரம்பித்தன. நிலச்சரிவு ஏற்படும் என்ற அச்சத்தில் மற்றவர்களை எச்சரித்து வெளியேறினோம். ஆனாலும் அதில் சிக்கினோம். லேசான காயம் ஏற்பட்டது" என்று கூறினார். கனமழை காரணமாக, பக்தர்கள் மற்றும் குதிரைச் சவாரி செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே பாதிப்பும் பெரியளவில் ஏற்படவில்லை.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நிலவும் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் காஷ்மீர் துணை நிலை ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications