மோடி பதவியேற்புக்கு முன்பு இந்திய தூதரக அதிகாரிகளை சிறை பிடிக்கத் திட்டமிட்ட லஷ்கர்!
டெல்லி: மோடி பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்திற்குள் புகுந்து அங்குள்ள தூதரக அதிகாரிகளை பிணையக் கைதிகளாகப் பிடித்து மிரட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் தூதர் ஷெய்தா அப்தலி கூறியுள்ளார்.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டி...

பிணைக் கைதிகளாகப் பிடிக்கத் திட்டம்
ஹெராத் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்குள் நுழைந்து அங்குள்ள இந்திய அதிகாரிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து மோடி பதவியேற்பின்போது பரபரப்பை ஏற்படுத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர்.

இரு நாடுகளுக்கு இடையே பகையை மூட்ட
இதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு தர்மசங்கடத்தையும், மோதலையும் ஏற்படுத்த அவர்கள் நினைத்திருந்தனர்.

மோடி அரசுக்கு நெருக்கடி தர
மேலும் புதிதாக பதவியேற்கும் மோடி அரசுக்கு நெருக்கடியைத் தருவதும் அவர்களின் திட்டமாக இருந்தது என்றார்.

பதவியேற்புக்கு முன்பு நடந்த தாக்குதல்
இந்த சதித் திட்டம் காரணமாகவே ஹெராத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், மோடி பதவியேற்புக்கு முன்பு தாக்குதலுக்குள்ளானது. இதற்கு லஷ்கர் இ தொய்பாவும், அதன் தலைவர் ஹபீஸ் சயீத்துமே காரணம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் குற்றம் சாட்டியிருந்தார்.

மோடியுடன் ஆலோசித்த கர்ஸாய்
இந்த சதித் திட்டம் குறித்து டெல்லி வந்திருந்தபோது மோடியுடனும் கர்ஸாய் ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்தார்.

இந்தியப் படையினர் முறியடித்தனர்
ஆனால் ஹெராத் தாக்குதலை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோ திபெத் எல்லைப்பாதுகாப்புப் படையினரும், ஆப்கானிஸ்தான் ராணுவமும் இணைந்து முறியடித்து விட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications