மெட்ரோ ரயிலிலிருந்து கடைசியாகப் போனில் பேசிய பிரஸ்ஸல்ஸில் மாயமான இன்போசிஸ் ஊழியர்!
டெல்லி: பிரஸ்ஸல்ஸில் மாயமாகியுள்ள சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷ் கடைசியாக மெட்ரோ ரயிலில் இருந்து போன் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் பணியாற்றி வந்த சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷ் மாயமாகியுள்ளார். பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்ததில் இருந்து அவரை காணவில்லை.
Raghavendran Ganesh - We have tracked his last call in Brussels. He was travelling in the metro rail. @SanjeevKandakur @IndEmbassyBru
— Sushma Swaraj (@SushmaSwaraj) March 24, 2016
அவரை செல்போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கணேஷின் தாய் அன்னபூரணியை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த மெட்ரோ நிலையம் வழியாகத் தான் கணேஷ் தினமும் வேலைக்கு செல்வார் என்பதால் அவரது குடும்பத்தார் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் கணேஷ் பற்றி சுஷ்மா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ராகவேந்திரன் கணேஷ் -- கடைசியாக அவர் பிரஸ்ஸல்ஸில் இருந்து போனில் பேசியுள்ளார். அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.