தங்கை ஆஷாவின் மகன் மரணம்: கானக்குயில் லதா மங்கேஷ்கரின் 86வது பர்த்டே கொண்டாட்டம் ரத்து
மும்பை: பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை ஆஷா போஸ்லேவின் மகன் புற்றுநோயால் இறந்துவிட்டார். இதையடுத்து லதாவின் 86வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
பிரபல பாலிவுட் பாடகி பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் 86வது பிறந்தநாளை திங்கட்கிழமை வெகு விமரிசையாக கொண்டாட அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் லதாவின் தங்கையும், பிரபல பாடகியுமான ஆஷா போஸ்லேவின் இரண்டாவது மகன் ஹேமந்த்(66) புற்றுநோயால் ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தார்.

இதையடுத்து லதாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. நேற்று லதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க பிரபலங்கள் பலர் அவரது செல்போன் மற்றும் டெலிபோனுக்கு அழைத்தும் யாரும் எடுக்கவில்லை.
15 இந்தி படங்கள் மற்றும் ஏராளமான மராத்தி பாடல்களுக்கு இசையமைத்த ஹேமந்த் தனது மனைவி சாஜிதா என்கிற ரமா போஸ்லேவை பிரிந்த பிறகு அவருக்கும் ஆஷாவுக்கும் இடையே பிரச்சனையாகிவிட்டது. ஹேமந்த் தன்னை கொடுமைப்படுத்துவதாக ஹேமா தனது புகாரில் தெரிவித்திருந்தார். அவரின் விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹேமந்த் ஹேமாவுக்கு மாதாமாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது.
ஹேமந்த் கடந்த 5 ஆண்டுகளாக ஸ்காட்லாந்தில் வசித்து வந்தார். சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி நடத்திவிட்டு மும்பை கிளம்ப தயாரானபோது தான் ஹேமந்தின் மரண செய்தி ஆஷாவுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் சிங்கப்பூரில் இருந்து கிளம்பி மும்பை வந்து தனது அக்கா வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் கையை பிடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி ஆஷா போஸ்லேவின் மகள் வர்ஷா மும்பையில் உள்ள தனது வீட்டில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வர்ஷா பாடகியாகவும், பத்திரிக்கையாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications