மறுபடியும் முதலில் இருந்தா? கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவின் சில பகுதிகளில் ஆகஸ்ட் 27 மற்றும் 28ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத பலத்த மழை கொட்டி தீர்த்தது. பல்வேறு அணைகளில் இருந்தும் கேரள அரசு மொத்தமாக தண்ணீரை திறந்து விட்டதால், எர்ணாகுளம், மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.
வெள்ளத்தாலும், மழை சார்ந்த பிற இயற்கை பேரிடர்களிலும், சுமார் 300 பேர் பலியாகி உள்ளனர். பல ஆயிரம் கோடிக்கணக்கான சொத்துக்கள் நாசமடைந்தன. இன்னும் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கணிசமானவர்கள் வீடு திரும்பினாலும் கூட, வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடைந்துள்ளதால் பீதியில் உள்ளனர். வீடுகளை செப்பனிடும் பணிகள் நடந்து வருகின்றன.
கேரளா மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவில் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், 28ஆம் தேதி மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய வட கேரள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இருப்பினும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 24 மணி நேர இடைவெளியில் 7 முதல் 11 செ.மீ அளவுக்கான மழை பெய்ய வாய்ப்புள்ள கன மழையாக இது இருக்கும் என்றும், இரவு நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்க வேண்டாம் என்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது, எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.