ஜெ. விடுதலை: நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் தவறை சுட்டிக்காட்டச் சென்ற வக்கீல் எங்கே?
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் உள்ள தவறை சுட்டிக் காட்ட சென்ற வழக்கறிஞர் மாயமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அவர் தற்போது பெங்களூரில் தங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மாயமான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் உள்ள கணக்குப் பிழை குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிடுவதற்காக பெங்களூரு சென்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியை திருப்பத்தூரில் வைத்து போலீசார் மடக்கிப் பிடித்ததாக தகவல்கள் கூறின. இருப்பினும் அவர் தற்போது பெங்களூரில் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் வங்கிகளில் இருந்து வாங்கி கடன் தொகை கூட்டலில் தவறு நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது. இதன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்து 8 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாக உயர்துள்ளதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக 10 சதவீதம் அளவு சொத்துக்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கொள்காட்டியே ஜெயலலிதா உள்ளிட்டோரை குமாரசாமி விடுவித்து இருப்பதால் தற்போது அந்த தீர்ப்பு செல்லுமா என கேள்வி எழுந்துள்ளதாக கூறிய கிருஷ்ணமூர்த்தி குமாரசாமியின் தீர்ப்பை திரும்ப பெற கோரி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட இருப்பதாக தெரிவித்தார்.
நீதிபதி குமாரசாமியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தயிருப்பதாகவும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அளிக்கும் பதிலின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தை நாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுத்த நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்துவதற்காக கிருஷ்ணமூர்த்தி பெங்களூருக்கு சென்றார். ஆனால் அவர் மாயமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு கோரி மனு
இந்த நிலையில், மாயமான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக, கர்நாடகா தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ராஜாராம் என்பவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்துவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
ஆனால் மனு சரியாக இல்லை என்றும் மீண்டும் தாக்கல் செய்யுமாறும் தலைமை நீதிபதி கூறவே நாளை தனது மனுவை ராஜாராம் தாக்கல் செய்யவுள்ளாராம்.












Click it and Unblock the Notifications