பெண்களுக்கு தலைமை பண்பை அதிகரிக்க வேண்டும்.. சுஜாதா கார்த்திகேயன் வலியுறுத்தல்
புவனேஸ்வர்: பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது ஆனால் ஆண்களோடு ஒப்பிட்டால் வறுமை காரணமாக அவர்கள் அதிகம் பங்களிக்க முடியவில்லை எனவே அடிமட்ட அளவில் பெண்களுக்கு தலைமை பண்பை அதிகரிக்கக்கூடிய விஷயங்களை கையில் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மின்சக்தி இயக்குனர் சுஜாதா கார்த்திகேயன்.
FICCI மற்றும் கிம்ஜி அறக்கட்டளையுடன் இணைந்து சம்பாத் குழுமம் ஏற்பாடு செய்த 'ஒடிசா 50' இன் ஒரு பகுதியாக பெண்கள் அதிகாரம் குறித்த ஒரு வெபினாரில் பங்கேற்று சுஜாதா கார்த்திகேயன் பேசினார்.
சுஜாதா கார்த்திகேயன் கூறியதாவது: பெண்கள் மேம்பாடோ அல்லது பிற விஷயங்களாக இருக்கட்டும். அரசு மட்டுமே அதை சரி செய்து விட முடியாது. அதே போன்ற மனநிலை கொண்ட தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டவை ஒன்றாக சேர்ந்து கைகோர்க்க வேண்டியது அவசியம்.
ஒடிசா மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மிஷன் சக்தி திட்டம் என்பது பிற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களில் இருந்து வேறுபட்டது. நமது முக்கியமான குறிக்கோள் அடிமட்ட அளவில் பெண்கள் தலைமைப் பண்பை அதிகரிக்கச் செய்வது. கடன் வழங்குவது மட்டும் நமது ஒரே குறிக்கோள் கிடையாது.
கொரோனா நோய் தொற்று காலத்தில் பெண்கள் சுய உதவி குழுக்கள் தாங்களாக முன்வந்து தலைமையேற்று வழிநடத்தினார். பொது மக்களிடையே சுகாதாரம், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சுய உதவிக் குழுக்கள் பங்கு அபாரமாக இருந்தது. இது தவிர பெண்கள் சுய உதவி குழுக்கள், சார்பில், 70 லட்சம் முகக் கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
நாம் பாலின சமத்துவம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். 2020ஆம் ஆண்டு மனித வள மேம்பாட்டு புள்ளி விவரங்கள் படி, நமது நாட்டில் மொத்த பணி இடங்களில் பெண்களின் பங்களிப்பு 23.5 சதவீதம் என்ற அளவுக்கு குறைவாக இருக்கிறது. ஆண்கள் 76 சதவீதம் பணியிடங்களில் உள்ளனர். சீனாவில் பெண்கள் பங்களிப்பு 60 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது.

இந்த வருட பொருளாதார ஆய்வறிக்கையை பார்த்தோமானால் ஒடிசா மாநிலத்தில் 22 சதவீதம் பெண்கள் பணியிடங்களில் இருக்கிறார்கள். 10 வருடங்கள் முன்பு 35 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது. இப்போது சரிவடைந்து வருகிறது. இதை சரி செய்ய வேண்டும்.
நிதி ஆயோக் ஆய்வு அறிக்கையின்படி 4 சதவீதம் பெண்கள் இன்ஜினியரிங் கல்வி முடிக்கிறார்கள். திறமை, பங்கேற்பு போன்ற அனைத்துமே சம்பள விகிதங்களில் உள்ள ஆண் பெண் இடையேயான ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

ஒடிசா மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடங்களை பிஜு ஜனதா தளம் ஆட்சி பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது சிறப்பான முன்னெடுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
பெண்கள் மேம்பாடு குறித்து முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், பெண்கள் முன்னேற்றம் பற்றி புரட்சியாளர் லெனின் கூட பேசியுள்ளார். உலகின் பாதி மக்கள் தொகை பெண்கள்தான். அவர்களை கவனிக்காமல் செய்யப்படும் எந்த புரட்சியும் வீணாக போகும் என்கிறார் லெனின். பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், நேர்மறையான தாக்கத்தை இந்த சமூகத்தில் பார்க்க முடியும். இவ்வாறு நவீன் பட்நாயக் சுட்டிக்காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications