மேற்கு வங்க தேர்தல்: மம்தாவை வீழ்த்த, காங்கிரஸ்-இடதுசாரிகள் நடுவே 'உடன்பாடு'
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்று இடதுசாரி கூட்டணி தலைவர் பீமன் போஸ் தெரிவித்தார். அதேநேரம், இது கூட்டணி கிடையாது என்றும், இரு கட்சியினரும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை 6 கட்டங்களாக 7 நாட்கள் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 116 தொகுதிகளுக்கான வேட்பார்கள் பட்டியலை இடதுசாரிகளின் கூட்டணித் தலைவர் பீமன்போஸ் கொல்கத்தாவில் வெளியிட்டார்.
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய பீமன் போஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடபோவதில்லை. அக்கட்சியோடு எங்களுக்கு கூட்டணியும் கிடையாது என்றார்.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் இடதுசாரி முன்னணி வேட்பாளர்களை நிறுத்தாமல், மறைமுகமாக அக்கட்சிக்கு ஆதரவு தரும் என்பதைத்தான், உடன்பாடு என்ற வார்த்தையால் பீமன் போஸ் குறிப்பிட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications