ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து நிச்சயம் - மத்திய அரசு

நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பல ஆயிரம் கோடி செலவில் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் சலுகைகள் பெற, 12 இலக்க எண் கொண்ட இந்த அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆனால், இந்த அடையாள அட்டை கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆதார் அடையாள அட்டைக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
செவ்வாய்க்கிழமை காலை பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சில திருத்தங்களுடன் அந்த மசோதாவுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தின் வருகிற குளிர்கால கூட்டத்தொடரில் ராஜ்யசபையில் தாக்கல் செய்யப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சட்டத்தின் மூலம், ஆதார் அடையாள அட்டை திட்டத்தை அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கான தேசிய அடையாள ஆணையம் ஒன்றை புதிதாக அமைக்கவும் வழிவகை செய்யப்படும். இந்த திட்டத்தின் கீழ் திரட்டப்படும் தகவல்களை தவறாக பயன்படுத்தினால், அதற்கான தண்டனை குறித்த விதிமுறைகளும் புதிய சட்ட மசோதாவில் இடம் பெற்று இருக்கும்.
இந்திய நாட்டு குடிமக்களுக்கு மட்டுமின்றி, யார்-யார் இந்தியாவில் வசிக்கிறார்களோ, அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்படும். தனி நபர் ஒருவரைப் பற்றிய அடையாளத்தைதான் இந்த அட்டை குறிக்குமே தவிர, அவர்கள் நாட்டைப்பற்றி அல்ல. இருப்பிட சான்றாகவும் இந்த அட்டையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதே நேரத்தில், விருப்பம் உள்ளவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அனைவரும் கண்டிப்பாக ஆதார் அட்டையை வாங்க வேண்டும் என்பது சட்டபூர்வ கட்டாயம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications