அடிக்க பாய்ந்த ஆண் சிங்கம்.. ஓரே கத்து தான்.. வன ராஜாவை அடக்கி உட்கார வைத்த பெண் சிங்கம்!
ஓரே ஒரு மிரட்டலில் ஆண் சிங்கத்தின் சப்த நாடிகளையும் அடக்கிய பெண் சிங்கத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அகமதாபாத்: அடிக்க வந்த ஆண் சிங்கத்தை ஒரே ஒரு மிரட்டலான கர்ஜனையில் அடக்கி உட்கார வைத்து, பெண் குலத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறது பெண் சிங்கம் ஒன்று.
'வெளியில புலி வீட்ல எலி' என்றொரு சொலவடை தமிழில் உண்டு. சில ஆண்கள் வெளியில் செம கெத்தாக சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டில், மனைவி ராஜ்ஜியம் தான் நடக்கும். இதில் விலங்குகளும் விதிவிலக்கல்ல என்று நிரூபித்திருக்கிறது ஒரு சிங்க ஜோடி.
குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப் பகுதியில் அமைந்திருக்கிறது சிங்கங்களின் சரணாலயமான கிர் தேசிய பூங்கா. இந்த பூங்காவில் சுமார் 600 சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. மற்ற உயிரியல் பூங்காக்களை போல் இல்லாமல், இந்த வனத்தில் சிங்கங்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அதனை நேரடியாக காணலாம்.
அப்படி சில மாதங்களுக்கு முன்பு கிர் பூங்காவில் லயன் சஃபாரி செய்த சுற்றுலா பயணிகள் ஒரு அரிய காட்சியை கண்டிருக்கின்றனர். காட்டுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு மண் சாலையில் ஒரு சிங்கமும், பெண் சிங்கமும் விளையாடிக்கொண்டிருந்தன.
அப்போது திடீரென அந்த ஆண் சிங்கம் கோபப்பட்டு பெண் சிங்கத்தை தாக்க முற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் சிங்கம் கடும் கோபத்தில் ஆண் சிங்கத்தை நோக்கை கர்ஜித்தது. இதை பார்த்து பயந்துபோன அந்த ஆண் சிங்கம் வேறு வழியில்லாமல் அமைதியாகிவிட்டது.
செம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா!
இந்த காட்சியை பார்த்தவர்கள், அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதைப்பார்த்த நெட்டிசன்கள், "என்ன தான் காட்டுக்கே ராஜாவா இருந்தாலும் வீட்டுல ராணியின் ஆட்சி தான் போல", என சிலாகித்து வருகின்றனர்.