உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக அறிவிப்பு... உ.பி. பேங்க்கில் நடந்த குழப்பம்!
உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக வங்கி அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் உயிரோடு இருக்கும் நபர் இறந்துவிட்டதாக வருவாய் துறையினர் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத்தைச் சேர்ந்தவர் தேவேந்திர குமார். இவர் கடந்த சனிக்கிழமை, தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், தேவேந்திர குமார் இறந்துவிட்டதாக வருவாய் துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தேவேந்திர குமார், தனது அடையாள அட்டை உள்ளிட்ட சான்றுகளை காண்பித்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த வங்கி ஊழியர்கள், போலீசில் புகார் செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என தேவேந்திர குமாரை மிரட்டியுள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த தேவேந்திர குமார் ஊடகங்களின் உதவியை நாடினார். இதுபற்றி செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட மாவட்ட ஆட்சியர் நேகா சர்மா, தேவேந்திர குமாரின் இறப்பு குறிப்பு பற்றி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் வருவாய் துறையினர் மீது எந்த தவறும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள மாவட்ட ஆட்சியர் நேகா சர்மா, வங்கி ஊழியர்கள் தான் தவறாக பதிவிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
“மேலும் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications