அரவிந்த் கேஜ்ரிவாலுடனான சந்திப்பை திடீரென ரத்து செய்தார் அத்வானி!!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சந்திக்க மறுத்துவிட்டார்.
இந்தியாவில் மீண்டும் எமர்ஜென்சி வராது என்று கூறமுடியாது என அத்வானி கருத்து தெரிவித்திருந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்தை ஆம் ஆத்மி கட்சித் தலைவரான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வரவேற்று இருந்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரவிந்த் கேஜ்ரிவால், எல்.கே.அத்வானியை சந்திப்பதற்காக அனுமதி கேட்டு இருந்தார். இதற்கு அத்வானி அலுவலகமும் அனுமதி அளித்து இருந்தது.
ஆனால் திடீரென அரவிந்த் கேஜ்ரிவாலுடனான சந்திப்பை அத்வானி அலுவலகம் திடீரென ரத்து செய்தது. அத்வானி சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் டெல்லியில் இல்லை என்பதாலும் இந்த சந்திப்பு அடுத்த வாரம் வேறு ஒரு நாளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த சந்திப்பு ரத்துக்கு பாரதிய ஜனதா மேலிடத்தின் நெருக்கடிதான் காரணம் எனவும் கூறப்படுகிறது.