மிசோரம் இறுதி கட்ட சர்வே: தொங்கு சட்டசபை உறுதி- காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி? பாஜகவுக்கு ஜீரோ?
ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்னும் சில மணிநேரத்தில் ஓயும் நிலையில் Lok Poll வெளியிட்ட இறுதி கட்ட கருத்து கணிப்பிலும் தொங்கு சட்டசபைதான் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான் மிசோரமில் சாத்தியம் என்கிறது இக்கருத்து கணிப்பு.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். மிசோரம் சட்டசபைக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் (நவம்பர் 7) தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மிசோரமில் இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளது.

இறுதி கட்ட சர்வே: மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று மாலை முதல் நவம்பர் 30-ந் தேதி வரை கருத்து கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்திருக்கிறது. இன்றைய தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ள நேரத்தில் Lok PoLL நிறுவனம் இறுதி கட்ட கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 19,380 பேரிடம் நடத்தப்பட்ட இக்கருத்து கணிப்பின் முடிவுகள்:
மிசோ தேசிய முன்னணி : 12 முதல் 14 இடங்கள்
காங்கிரஸ் கட்சி- 12 முதல் 14 இடங்கள்
ஜோரம் மக்கள் இயக்கம்- 10 முதல் 12 இடங்கள்
இதர கட்சிகள்- 0 முதல் 3 இடங்கள்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?: இதனால் மிசோ தேசிய முன்னணியும் காங்கிரஸும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம்; காங்கிரஸும் ஜோரம் மக்கள் இயக்கமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம்; மிசோ தேசிய முன்னணி- ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய இரு மாநில கட்சிகளும் கூட கை கோர்க்கலாம் என்பதுதான் மிசோரம் மாநில கள நிலவரமாக உள்ளது. இம்மாநிலத்தில் பாஜக களத்திலேயே இல்லை என்பதையும் Lok Poll இறுதி கட்ட சர்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications