அக்கா VS தம்பி.. ரேபரேலியில் பிரியங்காவுக்கு எதிராக பாஜக பிரம்மாஸ்திரம்! களமிறங்கும் வருண் காந்தி?
ரேபரேலி: வரும் லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் தாய் சோனியா காந்திக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் பிரியங்கா காந்தியை எதிர்த்து அவரது தம்பி வருண் காந்தியை களமிறக்க பாஜக திட்டமிட்டு வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 102 இடங்களுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் முடிந்துவிட்டது. இதையடுத்து 2ம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.

கடைசி கட்ட தேர்தல் என்பது ஜுன் 1ல் நடத்தி முடிக்கப்படும். அதன்பிறகு மொத்தமாக ஜுன் 4ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் அனைத்து கட்சிகளின் கவனமும் சென்றுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக 62 இடங்களில் வென்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ரேபரேலியில் மட்டும் சோனியா காந்தி வென்றார். ராகுல் காந்தி கூட அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை ரேபரேலி மற்றும் அமேதி என்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியாகும். இந்த தொகுதிகளில் தான் ராகுல் காந்தியின் குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் கடந்த 2019ல் அமேதியில் ராகுல் காந்தி தோற்றார். வரும் லோக்சபா தேர்தலில் மே மாதம் 20ம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அமேதியில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனால் காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ராகுல் காந்தி கடந்த முறை அமேதி, வயநாட்டில் போட்டியிட்டார். இதில் வயநாட்டில் வென்றார். இப்போது ராகுல் காந்தி மீண்டும் வயநாட்டில் களமிறங்கி உள்ளார். ஆனால் அமேதி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பதில் சஸ்பென்ஸ் உள்ளது.
அதேபோல் ரேபரேலி தொகுதி எம்பியாக உள்ள சோனியா காந்தி ராஜ்யசபா எம்பியாகிவிட்டார். இதனால் அந்த தொகுதியில் மகள் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இங்கு பிரியங்கா காந்தி போட்டியிட்டால் அவர் எளிதாக வெல்லலாம் என சொல்லப்படுகிறது. தற்போது உத்தர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்துள்ள நிலையில் பிரியங்கா காந்தியின் வெற்றி 100 சதவீதம் உறுதியாகும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தான் பிரியங்கா காந்திக்கு எதிராக அவரது தம்பி வருண் காந்தியை (மேனகா காந்தியின் மகன்) களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருண் காந்தி தற்போது உத்தர பிரதேச மாநில பிலிபட் தொகுதியின் பாஜக எம்பியாக உள்ளார். இந்த தொகுதியில் தற்போது வருண் காந்திக்கு பாஜக மீண்டும் சீட் கொடுக்கவில்லை. இதனால் அவர் பிரியங்கா காந்திக்கு எதிராக போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி -பெரோஸ் காந்தி தம்பதிக்கு 2 மகன்கள். மூத்த மகன் ராஜீவ் காந்தி. இளைய மகன் சஞ்சய் காந்தி. ராஜீவ் காந்தி -சோனியாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்ற மகன், மகள் பிறந்தனர். இந்திரா காந்தியின் 2வது மகன் சஞ்சய் காந்தி - மேனகா காந்தியை திருமணம் செய்தார். இவர்களின் மகன் தான் வருண் காந்தி. அதாவது பிரியங்கா காந்தியின் சித்தப்பா மகன் தான் வருண் காந்தி.
சஞ்சய் காந்தி மரணத்தை தொடர்ந்து மேனகா காந்தி தனிப்பாதையில் பயணிக்க தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் செயல்படாமல் சுயேச்சையாக சில தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு பாஜகவில் இணைந்தார். தாய் மேனகா காந்தி வழியில் மகன் வருண் காந்தியும் பாஜகவில் செயல்பட்டு வருகிறார். இருப்பினும் சமீபகாலமாக வருண் காந்தி பாஜகவின் சில திட்டங்களை விமர்சனம் செய்து வந்தார். இது தான் பிலிபட் தொகுதியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் வருண் காந்தி ரேபரேலியில் அக்காள் பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications