"இந்தியா" கூட்டணிக்கு கொள்ளி வைக்கும் நிதிஷ் குமார் என்னவெல்லாம் கம்பி கட்டுற கதை சொல்றாரு பாருங்க!
பாட்னா: இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக, பிரதமர் வேட்பாளராக தம்மை தேர்வு செய்யாத கோபத்தில் ஒட்டுமொத்த 'இந்தியா' கூட்டணியையே கலைத்துவிடும் வேலையில் இறங்கிவிட்டார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் என ஊடகங்கள் கை நீட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எதுவுமே தெரியாதது போல ஊடகங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் நிதிஷ்குமார் என்கின்றனர் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்.
'இந்தியா' கூட்டணிக்கு விதை போட்டவர் நிதிஷ்குமார்; இந்தியா கூட்டணியின் அறிவிக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் நிதிஷ்குமார்தான். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமாரைத்தான் அறிவிக்க வேண்டும் என்பதுதான் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு.

ஆனால் டெல்லியில் டிசம்பர் 19-ந் தேதி நடைபெற்ற "இந்தியா" கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டத்தில் யாருமே நிதிஷ்குமாரை கண்டு கொள்ளவில்லை. அத்துடன் "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பரிந்துரைத்தார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. அவருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆதரவு தந்தார்.
அவ்வளவுதான்.. "இந்தியா" கூட்டணியிலேயே நிலைதடுமாறிப் போனார் நிதிஷ்குமார். அப்போதுதான் டிஆர் பாலு, இந்தி மொழியில் பேசுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லுங்க என வழக்கம் போல கேட்க, எங்கேயோ போற.. என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், டிஆர் பாலும் மீது கோபத்தை காட்டி இந்தி வெறியை வெளிப்படுத்தினார் நிதிஷ்குமார். அத்துடன் நிற்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் இருந்தும் பாதியிலேயே புறப்பட்டுப் போனார். பொதுவான செய்தியாளர் சந்திப்பிலும் பங்கேற்கவில்லை.
இதனால் நிதிஷ்குமார் எப்படியும் 'இந்தியா' கூட்டணியை உடைத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பார் போல என அந்த அணித் தலைவர்களே பேசத் தொடங்கினர். இந்த நிலையில் இந்தியா கூட்டணி களத்தில் எதிர்க்கும் பாஜகவின் நிறுவனர் வாஜ்பாய் பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்தினார் நிதிஷ்குமார். அத்துடன் நின்றிருந்தாலும் பரவாயில்லை. 'இந்தியா' கூட்டணி குறித்து நிதிஷ்குமார் தெரிவித்த கருத்துகள்தான் நகைப்புக்குரியதாகிவிட்டது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
அதாவது 'இந்தியா' கூட்டணியில் எந்த பிரச்சனையுமே இல்லையாம். ஒருங்கிணைப்பாளர், பிரதமர் பதவி குறித்து எல்லாம் தாம் கவலைப்பட்டது இல்லையாம். 'இந்தியா' கூட்டணியை ஜெயிக்க வைப்பதுதான் இலக்காம். இப்போதைய கவலை, முன்னுரிமை எல்லாம் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிய வேண்டும் என்பதுதான் என்றெல்லாம் 'கம்பி கட்டுற' கதையெல்லாம் நீட்டி முழங்கியிருப்பதைத்தான் நமட்டு சிரிப்புடன் சொல்லுகின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications