மோடிக்கு ‛செக்’.. வாரணாசியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி? காங்கிரஸ் திட்டம் என்ன? மேட்டர் லீக்
வாரணாசி: பிரதமர் மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி களமிறங்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு மூத்த தலைவர் சொன்ன பதில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஆம்ஆத்மி உள்பட மொத்தம் 26 கட்சிகள் இணைந்து ‛‛இந்தியா'' என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் 2 ஆலோசனை கூட்டங்கள் முடிவடைந்துள்ளன. 3வது ஆலோசனை கூட்டம் இந்த மாத இறுதியில் மும்பையில் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அதற்கான பணிகளை கட்சிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளன. ஏனென்றால் உத்தர பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களை கைப்பற்றினாலே கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும்.

இத்தகைய சூழலில் தான் தற்போது உத்தர பிரதேசம் பாஜகவின் கோட்டையாக உள்ளது. மாநிலத்தில் பாஜக ஆட்சி நடப்பது பிரதமர் மோடிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த 2019 தேர்தலில் 62 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பிரதமர் மோடி இங்குள்ள வாரணாசி தொகுதியில் களமிறங்கி வாகை சூடினார்.
மாறாக காங்கிரஸ் கட்சி வெறும் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. சோனியா காந்தி மட்டும் ரேபரேலி தொகுதியில் வென்றார். ராகுல் காந்தியை காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். கடந்த 2004 முதல் அமேதியில் வெற்றி பெற்று வந்த ராகுல் காந்தி கடந்த முறை அதிர்ச்சி தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்பியானார் .
இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் இழந்த செல்வாக்கை மீட்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர், ‛‛ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவார். பிரியங்கா காந்தி விரும்பும்பட்சத்தில் வாரணாசியில் களமிறங்குவார்'' என்றார்.

அதாவது வாரணாசி என்பது பிரதமர் மோடி எம்பியாக இருக்கும் தொகுதியாகும். மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு நுழைந்த மோடி 2014, 2019 ஆகிய தேர்தல்களில் வாரணாசியில் களமிறங்கி வெற்றி பெற்றார். தற்போது அங்கு அவர் மீண்டும் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய தயாராக உள்ளார். இத்தகைய சூழலில் தான் பிரியங்கா காந்தி விரும்பினால் அங்கு அவர் போட்டியிடுவார் என அஜய் ராய் தெரிவித்துள்ளார்.
அஜய் ராயின் இந்த பேச்சு என்பது பிரியங்கா காந்தி வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முன்னதாக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து அஜய் ராய் தான் களமிறங்கினார். அந்த தேர்தலில் பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 1 லட்சத்து 95 ஆயிரத்து 159 ஓட்டுகளுடன் சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவ் 2ம் இடம் பிடித்த நிலையில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 548 ஓட்டுகளுடன் அஜய் ராஜ் 3ம் இடம்பிடித்து தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications