லோக்சபா தேர்தல் நாளை துவக்கம்: அஸ்ஸாம், திரிபுராவில் முதல்கட்ட வாக்குப்பதிவு
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை துவங்குகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளில் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை முதல் வரும் மே மாதம் 12ம் தேதி வரை ஒன்பது கட்டமாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை அஸ்ஸாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் துவங்குகிறது. இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் தேஸ்பூர், கலியாபோர், ஜோர்ஹத், திப்ருகார், லக்கிம்பூர் ஆகிய 5 தொகுதிகளிலும் திரிபுராவில் மேற்கு திரிபுராவிலும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.
அஸ்ஸாமில் நாளைய வாக்குப்பதிவுக்காக 8 ஆயிரத்து 588 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பதட்டமான 3 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் காங்கிரஸ், பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன.