3வது கட்ட லோக்சபா தேர்தல்- கேரளா- 66%, ஒடிஷா, ஹரியானா- 60%, டெல்லி 54% வாக்கு பதிவு
டெல்லி: லோக்சபா தேர்தலில் 3வது கட்டமாக பல மாநிலங்களில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. கேரளாவில் 66% வாக்குகள் பதிவாகி இருந்தன. டெல்லியில் 54%, அந்தமானில் 38%, பீகாரில் 38%, ம.பி.யில் 40%, ஒடிஷாவில் 60% ஜார்க்கண்ட்டில் 43% வாக்குகள் பதிவாகி உள்ளன.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 2 கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்டது. 3வது கட்டமாக 14 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

அரசியல் தலைவர்கள்..
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி., பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட அரசியல் நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

டெல்லியில் 54%
டெல்லியில் காலை 11 மணியளவில் 25 சதவீத வாக்குகள் பதிவாகின. இது பகல் 1 மணியளவில் 40%த்தை எட்டியது. மாலை 5 மணி நிலவரப்படி இது 54%ஆனது.

கேரளாவில் 66%
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் கிராமங்கள் மற்றும் மாநிலத்தின் உள்புற பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் பெண்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். சில இடங்களில் காலையிலேயே நீண்ட வரிசை காணப்பட்டது. இது போல திருவனந்தபுரம், கொல்லம் தொகுதிகளிலும் காலையிலேயே வாக்கு பதிவு வேகமாக நடந்தது.
சாலக்குடி, காசர்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் புதிய வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வந்தனர். வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் 17 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பகல் 1 மணியளவில் இது 50%த்தை தாண்டியது. மாலை 5 மணி அளவில் 66% ஆக இருந்தது.

ஒடிஷாவில் 60%
ஒடிஷா மாநிலத்தில், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. 147 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக இன்று 70 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இம்மாநிலத்தில் மாலை 5 மணியளவில் 60% வாக்குகள் பதிவாகி இருந்தன.

முதல்வர் தொகுதி
ஒடிஷாவில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 70 தொகுதிகளில் 673 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஹிஞ்சிலி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். ஒடிஷாவில் 2வது மற்றும் கடைசிக் கட்டமாக 77 தொகுதிகளுக்கு வரும் 17-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் - கூடுதல் பாதுகாப்பு
இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பல மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் இருந்தன. இதனால் கூடுதல் பாதுகாப்புப் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழக எல்லையையொட்டி கேரளப் பகுதிகளில் கன மழை. வாக்குப்பதிவு பாதிப்பு
தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்கு வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.
மேலும் கொல்லம் மாவட்டத்தில் மலைப் பகுதியில் வசித்து வருவோரில் பெரும்பாலானவர்கள் கடைசி நிமிடத்தில் வாக்களிக்க வந்ததால் அவர்களை அழைத்து வர ஏகப்பட்ட ஜீப் வாகனங்களில் கட்சியினர் விரைந்தனர்.
வாக்குப்பதிவு முடியும் தருவாயில் மழை குறுக்கிட்டதால் கொல்லம் முழுவதிலும் வாக்குப் பதிவு பெரும் பாதிப்பை சந்தித்ததாம். அதேபோல திருவனந்தபுரம் பகுதியிலும் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டதாக தகவல்கள வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications