பாஜக செல்வாக்கு சரிவு; ராகுல் பிரதமராக தென்னிந்தியாவில் அதிக ஆதரவு: சிஎஸ்டிஎஸ் சர்வே
Recommended Video

டெல்லி: பாஜகவின் செல்வாக்கில் சரிவு காணப்படுவதாக லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் நடத்திய முதல் கருத்துக் கணிப்பில் கிடைத்த வாக்குகளை விட தற்போது 5 சதவீதம் குறைந்த வாக்குகளே பெற்றுள்ளது பாஜக.
மூட் ஆப் தி நேஷன் என்ற பெயரில் லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் நடத்திய 2வது கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜகவின் ஒட்டுமொத்த செல்வாக்கில் 5 சதவீதம் சரிவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆதரவில் சரிவு
நாளை லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு 34 சதவீத வாக்குகள் கிடைக்கும் என இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. பாஜக மீதான மக்களின் சாதகமான பார்வையிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

2வது சர்வே முடிவுகள்
2வது கருத்துக் கணிப்பு 19 மாநிலங்களில் 175 லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 14,336 வாக்காளர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இவர்களில் 34 சதவீதம் பேரின் ஆதரவு பாஜகவுக்குக் கிடைத்துள்ளது.

பாஜகவின் சரிவில் 5% சரிவு
இது கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளை விட 3 சதவீதம் அதிகமாகும். அதேசமயம், 2017 மே மாதம் சிஎஸ்டிஎஸ் நடத்திய முதல் கருத்துக் கணிப்பை விட 5 சதவீதம் குறைவாகும். லோக்சபாவுக்குத் தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சிக்கு 25 சதவீத ஆதரவு கிடைக்கும் என இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் பலத்த அடி
பாஜகவின் செல்வாக்கானது மேற்கு, மத்திய மற்றும் தென் இந்தியாவில் சரிவைக் கண்டுள்ளது. மே மாதம் நடந்த கருத்துக் கணிப்பை விட 8 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கிராமப்புறங்கள், சிறு நகரங்களில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், பெரிய நகரங்களில் பாஜகவின் செல்வாக்கு அப்படியே உள்ளது.

விவசாயிகள் கடும் கோபம்
விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரின் அவ நம்பிக்கையை வெகுவாக சம்பாதித்துள்ளது பாஜக. பாஜகவை விட ஐக்கிய முற்போக்குக்கு கூட்டணி அரசு தங்களின் கவலைகளை பரிவுடன் கவனித்ததாக விவசாயிகள் கருதுகிறார்கள் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற தரப்பினரிடமும் கூட இதே கருத்து மேலோங்கியுள்ளது.

தென்னிந்தியாவில் ராகுலுக்கு ஆதரவு
18 முதல் 25 வயதுக்குட்பட்டோரிடம் பாஜகவுக்கு அதிக ஆதரவு காணப்படுகிறது. இருப்பினும் கடந்த எட்டு மாதங்களில் இருந்ததை விட இப்போது இதன் அளவு குறைந்துள்ளதையும் காண முடிகிறது. தென் இந்தியாவில் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகம் உள்ளது. மோடிக்கு தென் இந்தியர்களிடம் ஆதரவு குறைந்தே உள்ளது. பிரதமர் வேட்பாளருக்கு ராகுல் காந்திக்கு 27 சதவீதம் பேரும், மோடிக்கு 24 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மோடி அரசு மீது அதிருப்தி அதிகரிப்பு
மோடி அரசின் மீதான திருப்தியும் மக்களிடையே குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. முதல் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்ட திருப்தி 64%ஆகும். ஆனால் தற்போது இது 51 சதவீதமாக குறைந்து விட்டது. அதிருப்தி அளவானது 27% என்பதிலிருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அடி வாங்கும் மோடி செல்வாக்கு
மோடியின் செல்வாக்கிலும் கடந்த 2017 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் காணப்பட்ட செல்வாக்கு பலமாக அடி வாங்கியுள்ளது. அதேசமயம், ராகுல் காந்திக்கான ஆதரவு இரு மடங்காக உயர்ந்துள்ளது. பாஜக அரசின் பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ஜிஎஸ்டி சட்டம் அவசர கோலத்தி்ல அள்ளித் தெளிக்கப்பட்ட ஒன்று என்று பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications