25 காங். எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்கிறார் சபாநாயகர்?
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபா நடவடிக்கைகளில் பங்கேற்க 25 காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நடவடிக்கையை ரத்து செய்ய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.பி.எல். நிதி முறைகேட்டில் தேடப்படுகிற குற்றவாளி லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.

இதைத் தொடர்ந்து நேற்று அமளியில் ஈடுபட்ட காங்கிரசின் 25 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 5 நாட்களுக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடதுசாரி கட்சிகள், காங்கிரசுக்கு ஆதரவாக 5 நாட்கள் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன.
இந்நிலையில் பிஜூ தனதா தளம், சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்து 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மறு பரிசீலனை செய்து, அதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் திரும்ப பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications