டெபிட் கார்டை தேய்த்து ஐயப்பனுக்கு காணிக்கை செலுத்தலாம்!
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் காணிக்கை செலுத்தும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா: கேரள மாநிலத்தின் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவிலில் இ ஹுண்டி அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் நமது காணிக்கைகளை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பால், நாடு முழுவதும் அனைத்துத் தரப்பினரும் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். கோவில்களும் அதிலிருந்து தப்பவில்லை.

இந்த நிலையில் சபரிமலை பக்தர்கள் காணிக்கை செலுத்துவதில் சிக்கல் வரக் கூடாது என்பதற்காக இ ஹுண்டியை அறிமுகம் செய்துள்ளது திருவாங்கூர் தேவசம் போர்டு. அதன்படி பக்தர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக தங்களது காணிக்கைளை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் அஜய் தரயில் கூறுகையில், எவ்வளவு வேண்டுமானாலும் டெபிட் கார்டு மூலமாக காணிக்கையாக தரலாம். குறைந்தது ரூ. 1 முதல் தரலாம். இதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்றார்.
சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மகரவிளக்கு விழாவுக்கு பல லட்சம் பேர் கூடுவார்கள். ஆனால் இந்த முறை ரூபாய் நோட்டு ஒழிப்பால் பக்தர்கள் காணிக்கை வெகுவாக குறையும் என்று தெரிகிறது. இது கோவில் நிர்வாகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவேதான் அது இ ஹுண்டியலை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
கோவிலில் வைக்கப்பட்டுள்ள ஸ்வைப்பிங் மெஷினை ஆலப்புழாக துணை கலெக்டர் சந்திரசேகர் இன்று தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications