கோர்ட் அவமதிப்பு கேஸ் போட்ருவோம்.. அனுமாருக்கு நோட்டீஸ் அனுப்பி 'எச்சரித்த' நகராட்சி!
போபால்: கோயில் நிலம், பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகம் ஒன்று, கடவுளான அனுமாருக்கே நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தின் பஜாரியா நகராட்சியில், அனுமார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலின் ஒரு பகுதி பொது இடத்தை ஆக்கிரமித்து அமைந்துள்ளதாக கூறி குவாலியர் ஹைகோர்ட்டில் பொதுநல வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக கோர்ட் வழிகாட்டுதல் பேரில், நகராட்சி நிர்வாகமும் நோட்டீஸ் அனுப்பியது. கோயில் நிர்வாகத்தின் பெயரில் இந்த நோட்டீசை அனுப்புவதற்கு பதிலாக, நேரடியாக அக்கோயிலின் தெய்வமான அனுமார் பெயருக்கே அனுப்பி உள்ளனர்.
அந்த நோட்டீசில், "பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக சாலையை ஆக்கிரமித்துள்ளீர்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆக்கரமிப்பை காலி செய்யுமாறு குவாலியர் ஹைகோர்ட் உங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உங்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இருந்தும் நீங்கள் காலி செய்யவில்லை. தொடர்ந்து நீங்கள் காலி செய்யாமல் இருந்தால் உங்கள் (அனுமார் மீது) மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும்" எனவும் அனுமாரையே எச்சரிக்கும் வகையில் வாசகங்கள் உள்ளன.
ஆண்டவனுக்கே நோட்டீஸ் அனுப்பிய நகராட்சியை பார்த்து மக்கள் சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் உள்ளனர். மக்களின் அதிருப்தியை தொடர்ந்து, தவறுதலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதனை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications