ஆந்திராவில் 3 மாணவர்கள் கொடூரமாக சாவு... லாரியில் 3 கி.மீ.க்கு இழுத்துச் செல்லப்பட்ட பரிதாபம்
விசாகப்பட்டினம்: குடிகார டிரைவர் ஓட்டிச் சென்ற சிமெண்ட் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் விசாப்பட்டினம் அருகே தர்மாவரம் அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் ராயல் நவீன், கார்த்திக், துர்க பிரசாத் சாய். இந்த 3 பேரும் ஆதித்யா எஜூகேஷனல் என்ற கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் தர்மாவரம் ஜங்ஷனில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது சிமெண்ட் லாரி ஒன்று மிகவேகமாக அவர்களது வாகனம் மீது மோதியது. இதில் மாணவன் நவீன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான். மற்றொரு மாணவனான பிரசாத் அரை கிலோமீட்டர் தூரம் லாரியில் இழுத்துச் செல்லப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட உயிரிழந்தான்.
இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மாணவன் கார்த்திக் லாரியின் பம்பரில் மாட்டிக்கொண்டான். இதனால் வாகனத்தோடு லாரியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டான். இதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான்.
இதனை பார்த்து கூச்சலிட்ட பொதுமக்கள் லாரியை பிடிக்க முயன்றனர். ஆனால் லாரியை நிறுத்த மறுத்து டிரைவர் வேகமாக இயக்கி உள்ளார். தகவல் அறிந்த போலீசார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று லாரியை சுற்றி வளைத்தனர்.
லாரியில் இருந்து இறங்கி தப்ப முயன்ற டிரைவரின் பெயர் ஷேக் யாகூப் பாசா என்பதும், அவர் விபத்தின் போது மது போதையில் நிதானம் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து யாகூப்பை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications