தெலுங்கானாவில் காதல் திருமணத்துக்கு தடை விதித்த கோயில்!
தெலுங்கானாவில் உள்ள கோயில் ஒன்றில் காதல் திருமணங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காதலர் கோயில் என அழைக்கப்பட்ட லட்சுமி நரசிம்மர் கோயிலில் காதல் திருமணங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ளது தாபலா லட்சுமி நரசிம்மர் கோயில். பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் திருமணம் செய்தால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அந்த பகதி மக்களின் நம்பிக்கை. இக்கோயிலுக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற பகுதிகளில் இருந்து காதல் ஜோடிகள் வந்து திருமணம் செய்வது வழக்கம். இக்கோயிலில் ஏராளமான திருமணங்களும் நடைபெற்றுள்ளன.

ஒரு திருமணத்துக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம். இதன் மூலமே கோயிலுக்கு அதிக வருமானம் கிடைக்கும். கடந்த ஓராண்டில் சுமார் 13 ஆயிரம் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்யும் ஜோடிகள் தங்கள் வயது சான்றிதழ் மட்டும் அளித்தாலே போதும். திருமணம் நடத்த கோயில் நிர்வாகம் அனுமதிக்கும். இதனால், இந்த கோயிலை 'காதலர் கோயில்' என்றே இப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.
இந்நிலையில், மக்கான்களி பகுதியில் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் பணிபுரிந்து வரும் அனில் என்பவர், ஹஸ்தாபுரத்தை சேர்ந்த மவுனிகா என்ற 18 வயது பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று இந்த காதல் ஜோடி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு வந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெண்ணின் குடும்பத்தினர் கோவிலுக்குச் சென்று அணிலை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தற்போது அந்த கோயிலில் காதல் ஜோடிகள் திருமணம் செய்வதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோயில் நிர்வாக கமிட்டி செயலாளர் வெங்கட் ரெட்டி கூறுகையில், ''இனிமேல் இந்த கோயிலில் காதல் திருமணங்கள் செய்ய அனுமதிக்க கூடாது என போலீசார் உத்தரவிட்டிருக்கிறார்கள். மேலும் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இதை குறிப்பிட்டு கோயில் வாசலில் போர்டு வைத்திருக்கிறோம்'' என்றார். இந்த தடை நீக்கப்பட வேண்டும் எனவும் சிலர் கோரி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications