இப்படி ஒரு சிக்கலா.. இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்துக்கே சவாலாகும் காதல்! ஆந்திரா வந்த இலங்கை பெண்
அமராவதி: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பேஸ்புக் காதலரை தேடி இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்து இருக்கிறார். ஒரே மாதத்தில் இதேபோன்று மூன்றாவது சம்பவம் அரங்கேறியுள்ளது.
இலங்கையை சேர்ந்தவர் விக்னேஷ்வரி. பேஸ்புக் பயனாளரான இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் லட்சுமணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் பேஸ்புக்கில் பேசி பழகி வந்து உள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கி உள்ளார்கள். தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு இருவரும் பேசத் தொடங்கினார்கள்.

வாட்ஸ் அப், பேஸ்புக், தொலைபேசி வாயிலாக ஒருவரிடம் ஒருவர் மனம் விட்டுப்பேசி தீவிரமாக காதலிக்கத் தொடங்கிய இருவரும், திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தார்கள். இருவருக்கும் சிக்கலாக இருந்தது எல்லைதான். விக்னேஷ்வரி இலங்கையை சேர்ந்தவர் என்பதால் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த இருவரும் எப்படி திருமணம் செய்துகொள்வது என்று ஆலோசித்து உள்ளனர்.
ஒரு கட்டத்தில் விக்னேஷ்வரி லட்சுமணனுக்காக இந்தியா வர முடிவு செய்தார். அதை தொடர்ந்து சுற்றுலா விசா மூலமாக கடந்த 20 நாட்களுக்கு முன் இந்தியாவுக்கு வருகை தந்த அவர் லட்சுமணனின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் வி கோட்டா ஆரிமாகுலபல்லிக்கு சென்று இருக்கிறார். கட்டித் தொழிலாளியான லட்சுமணனின் குடும்பத்தினரிடம் தங்கள் காதலை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
அவர்களும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இந்த பயணத்திலேயே மணம் முடித்துக்கொள்ள முடிவு செய்தார்கள். இருவருக்கு 15 நாட்களுக்கு முன்பாக ஆந்திராவின் வி கோட்டா பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் திருமணம் செய்துகொண்டார்கள். ஆகஸ்டு 6 ஆம் தேதி விக்னேஷ்வரியின் சுற்றுலா விசா முடிவடைய உள்ளது.
அதற்குள் விக்னேஸ்வரி இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்றும் அதற்குள் பதிவுத் திருமணத்தை செய்துகொள்ள வேண்டும் எனவும் சித்தூர் எஸ்பி அலுவலகத்தில் இருந்து விக்னேஷ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் அவர் இலங்கைக்கு சென்று லட்சுமணனின் மனைவியாக இந்தியாவுக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பதிவுத் திருமண வேலையில் இருவரும் ஈடுபட்டு உள்ளார்கள்.
இதேபோல் ஜூலை தொடக்கத்தில் பப்ஜி மூலம் ஏற்பட்ட காதலில் இந்தியாவை சேர்ந்த சச்சின் என்பவருக்காக ஏற்கனவே திருமணமான பாகிஸ்தானை சேர்ந்த சீமா என்ற பெண் தனது 4 குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்த சம்பவம் பெரிய அளவில் விவாத பொருளானது. போலீசார் அவர்களை கைது செய்த நிலையில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அதேபோன்று ராஜஸ்தானை சேர்ந்த அஞ்சு என்ற திருமணமான பெண் பாகிஸ்தானை சேர்ந்த 29 வயது காதலரான நஸ்ருல்லாவை சந்திக்க வாகா எல்லையை தாண்டி அந்த நாட்டுக்கு சென்றார். பேஸ்புக்கில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறி அஞ்சுவை இவ்வாறு செல்ல வைத்து இருக்கிறது.
இந்த மூன்று நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால், பெண்களே காதலை தேடி நாடு விட்டு நாடு சென்று இருக்கிறார்கள். இதில் இலங்கையில் இருந்து வந்த பெண்ணை தவிர மற்ற இருவருமே ஏற்கனவே திருமணம் செய்துகொண்டவர்கள். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன் வீடு, ஊர், மாவட்டத்துக்குள் இருந்த தொடர்புகள் தற்போது எல்லை தாண்டி நாடு விட்டு நாடு செல்கிறது.
திருமணமான பெண்கள் கணவனை விட்டுவிட்டு எல்லை கடந்து காதலனை தேடி வருவதன் பின்னணியில் பல்வேறு உளவியல் சார்ந்த காரணங்கள் உள்ளன. முகமரியாமல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஏற்படும் நட்பு, காதல் மூலம் ஏமாற்றப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக அந்நிய நாட்டுக்கு சட்டவிரோதமாகவோ, சட்டப்படியோ சென்று அங்கு ஏமாற்றப்பட்டால் உதவக்கூட ஆட்கள் கிடைப்பது கடினம்.












Click it and Unblock the Notifications