ஓடி வாருங்கள் மாஜி கூட்டாளிகளே! பாஜக கூட்டணியில் மீண்டும் இணைகிறது அகாலி தளம்- 7 சீட் கன்பார்ம்!
அமிர்தசரஸ்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிரோமணி அகாலிதளம் கட்சி மீண்டும் இணைய உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் அகாலி தளம் 7 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மிக நீண்டகாலம் இருந்த கட்சிகளில் ஒன்று சிரோமணி அகாலி தளம். காங்கிரஸுடன் ஒரு காலத்திலும் கூட்டணி சேரவே முடியாத நிலையில் இருப்பதுதான் அகாலி தளம். பஞ்சாப் பொற்கோவில் ராணுவ நடவடிக்கை, இந்திரா காந்தி படுகொலை, சீக்கியர் படுகொலை ஆகியவற்றால் காங்கிரஸுடன் அகாலி தளம் கூட்டணி சேராது என்ற நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணியிலேயே நீடித்தது.

ஆனால் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் அகாலி தளம் கட்சிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. டெல்லியில் பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தியதால் அகாலி தளம், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது. இதனால் மத்திய அமைச்சர் பதவியையும் உதறியது. பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் இணையவில்லை அகாலி தளம்.
தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பழைய கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக இணைந்து கொண்டிருக்கின்றன. இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார் அந்த அணியை நடுத்தெருவில் விட்டுவிட்டு பாஜக கூட்டணிக்கே ஓடிப் போனார். அதேபோல ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் பாஜக கூட்டணிக்கே திரும்புகிறது.
இதனைத் தொடர்ந்து அகாலி தளம் கட்சியும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாம். இது தொடர்பாக இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளதாம். பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் கட்சி 7 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் போட்டியிடவும் பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதாம். இதனால் எந்த நேரத்திலும் அகாலி தளம் கட்சி, பாஜக தலைமையிலான கூட்டணியில் இணையும் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications