கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து... ஐசியூ சொகுசு வரியை ரத்து செய்ய கர்நாடக அரசு பரிசீலனை
பெங்களூரு: கர்நாடகத்தில் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவு எனப்படும் ஐசியூவில் உள்ள படுக்கைகளுக்கு வசூலிக்கப்படும் சொகுசு வரியை ரத்து செய்வது குறித்து அம்மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது.
கர்நாடகாவில் தினசரி ரூ. 1000க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் ஐசியூ படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகள் அரசுக்கு 8 சதவீத சொகுசு வரி கட்ட வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டது.
ஆனால் அரசின் இந்த உத்தரவிற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவுக்கு கோரிக்கைகள் விடப்பட்டன.
இந்த வரி விதிப்பால் நோயாளிகளுக்குத்தான் சிரமம் ஏற்படும் என மருத்துவர்கள் கூறி வந்தனர். மேலும் நோயாளிகள் மத்தியிலும் இது அதிருப்தியை ஏற்படுத்தியது. காரணம் இந்த வரி விதிப்பால் நாளொன்றிற்கு ஐசியூ கட்டணம் ரூ. 200 முதல் 400 வரை அதிகரித்தது.
இந்நிலையில், தொடர் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த உத்தரவைத் திரும்பப் பெறுவது தொடர்பாக அம்மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் இது தொடர்பான உத்தரவை முதல்வர் சித்தராமையா அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1979ம் ஆண்டு கர்நாடக சொகுசு வரிச் சட்டத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்டது இந்த உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது.