ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார் சபாநாயகர்.. ஜனாதிபதியிடம் ஸ்டாலின் முறையீடு
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசினார்.
டெல்லி: ஆளும் கட்சிக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்பட்டார் என்று குடியசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தெரிவித்ததாக டெல்லியில் பேசிய தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கடந்த 18ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் முன் மொழிந்தார். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்ததால் அமளி ஏற்பட்டது.

இதனையடுத்து திமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் தனபால் எண்ணிக் கழிக்கும் முறையில் வாக்கெடுப்பை நடத்தி தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனை ஏற்க மறுத்த மு.க ஸ்டாலின் இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முறையிட்டார். இந்தநிலையில் டெல்லி வந்துள்ள ஸ்டாலின், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று மாலை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சட்டசபையில் சபாநாயகர் தனபாலின் செயல்பாடுகள் குறித்து பிரணாப் முகர்ஜியிடம் முறையிட்டுள்ளோம். ஆளும்கட்சிக்கு சாதகமாக சபாநாயகர் நடந்து கொண்டார் என தெரிவித்தோம். நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். எங்களது கோரிக்கையை குடியரசுத் தலைவர் பரிசீலிப்பார் என நம்புகிறோம் என்றார். அப்போது ஸ்டாலினுடன் துரைமுருகன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications