'காசே இல்லை.. இந்த வீட்டுக்கு எதுக்கு பூட்டு..' கடுப்பான கொள்ளையர்கள் கலெக்டருக்கு எழுதிய கடிதம்
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் கொள்ளையடிக்கச் சென்ற திருடர்கள், வீட்டில் பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து, 'பணம் இல்லாத இந்த வீட்டையெல்லாம் எதற்காகப் பூட்டி வைத்திருக்கிறீர்கள்?" என்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளைக் குறிவைக்கும் கொள்ளையர்கள், வீடுகளில் இருக்கும் பணம், பொருள் தொடங்கி அனைத்தையும் கொள்ளையடித்து தங்கள் கைவரிசையைக் காட்டுவார்கள்
நாளை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- திமுகவின் வெற்றி தொடருமா? பாமக சாதிக்குமா?
ஆனால், மத்தியப் பிரதேசத்தில் கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் பணம் சுத்தமாக இல்லாததால், வீட்டின் உரிமையாளருக்குத் திருடர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளை சம்பவம்
மத்தியப் பிரதேசத்தில் தேவாஸ் என்ற மாவட்டத்தில் கதேகான் பகுதியில் துணை-பிரிவு மாஜிஸ்திரேட் ஆகக் கடந்த சில வாரங்களுக்கு முன் திரிலோச்சின் கவுர் என்பவர் பொறுப்பேற்றார். இவருக்குச் சொந்தமான வீடு தேவாஸ் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. இருப்பினும், அலுவல் பணி காரணமாக திரிலோச்சின் கவுரால் கடந்த 15 நாட்களாக அந்த வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் திரிலோச்சின் கவுர், தனது சொந்த வீட்டிற்குச் சென்ற போது, அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
கொள்ளையர்களின் கடிதம்
வீட்டைத் திறந்து பார்த்தும் பொருட்கள் எல்லாம் கலைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ரொக்க பணத்தையும், சில வெள்ளி நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்த விசாரணையைத் தொடங்கினர். அப்போது அங்குக் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கடிதம் ஒன்றையும் கண்டுபிடித்தனர்.
எதற்குப் பூட்டிச் செல்கிறீர்கள்
துணை-பிரிவு மாஜிஸ்திரேட் வீட்டில் பெரிய அளவிலான பணமோ விலைமதிப்புமிக்க பொருளோ இல்லதாதல் அந்த கொள்ளையர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால், "கலெக்டர் அவர்களே, பணமோ விலைமதிப்பு மிக்க பொருளோ இல்லாத இந்த வீட்டையெல்லாம் எதற்காகப் பூட்டி வைத்திருக்கிறீர்கள்?" என்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டு அந்த கொள்ளையர்கள் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் சவால்
முக்கிய நபர்கள் வசிக்கும் அந்த பகுதியில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் போலீசாருக்கும் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஏனென்றால் தற்போது கொள்ளை நடந்த இந்த வீட்டின் அருகில் தான் வழக்கறிஞர் தொடங்கிப் பல முக்கிய நபர்களும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் உம்ராவ் சிங் கூறுகையில், "ரூ 30,000 ரொக்கமும் சில நகைகளும் திருடப்பட்டுள்ளது. 15 நாட்கள் வரை வீடு பூட்டப்பட்டு இருந்ததால் இந்த கொள்ளை சம்பவம் எப்போது நடைபெற்றது எனத் தெளிவாகத் தெரியவில்லை "என்று கூறினார்.