குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை... ம.பி அரசின் அதிரடி சட்டதிருத்தம்!
குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் புதிய சட்டத்திருத்தத்திற்கு மத்திய பிரதேச ஒப்புதல் அளித்துள்ளது.
போபால் : 12 வயது மற்றும் அதற்கு கீழ்பட்ட வயதில் உள்ள குழந்தைகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத்திற்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மத்திய பிரதேசம் தொடர்ந்து இருந்து வருகிறது. மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 12 பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அரசின் புள்ளி விவரங்களின்படி 2016 பிப்ரவரி 1 முதல் 2017 பிப்ரவரி வரையிலான கால கட்டத்தில் 4 ஆயிரத்து 279 பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
248 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2260 பேர் சிறுமிகள் என்பது வேதனை அளிக்கும் விஷயமாகும். என்று தெரியவந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்களின்படி 2015ல் நாட்டிலேயே அதிகபட்ச அளவாக 4391 பேர் மத்திய பிரதேசத்தில் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தி பிரதேச அமைச்சரவை ஒப்புதல்
எனவே பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க சட்டத்தை பலப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அந்த மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனைக்கு பதிலாக மரண தண்டனை வழங்கு இந்த மசோதா அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீது விவாதம் நடைபெற்ற நிலையில் இந்த மசோதாவிற்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடுமையான தண்டனை
இந்த புதிய சட்டதிருத்தமானது இன்று அந்த மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது. மத்திய பிரதேச அரசு நிறைவேற்றும் இந்த சட்டதிருத்தம் பின்னர் மத்திய அரசு மற்றும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த மசோதா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில நிதி அமைச்சர் ஜெயந்த் மாலியா, "மைனர் பெண்களை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தத்தின் மூலம் குற்றவாளி 376 AA மற்றும் 376 DA சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை பெறுவார்" என்று கூறியுள்ளார்.
அதிரடி மாற்றங்கள்
இதே போன்று ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் பலாத்காரம் செய்பவர்கள் கடுமையான குற்றவாளியாக கருதப்பட்டு அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 493(a) கீழ் நடவடிக்கை. ஒரு பெண்ணை இரண்டாவது முறையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த குற்றவாளிக்கு ரூ. 1 லட்சம் அபராதத்துடன், ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவில் சிறையில் அடைக்கப்படுவார் என்பன உள்ளிட்ட சட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மரண தண்டனை யாருக்கு?
இந்தியாவில் கொலை, கூட்டுக் கொள்ளை மற்றும் கொலை, குழந்தையை தற்கொலைக்கு தூண்டுதல் அல்லது காரணமாக இருத்தல், அரசுக்கு எதிரான போரை ஏற்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக மரண தண்டனை அளிக்கப்படுகிறது. இதே போன்று தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பொதுவாக பலாத்கார வழக்குகளில் ஆயுள் தண்டனையே நீதிமன்றங்கள் வழங்குகின்றன. அரிதிலும் அரிதான வழக்குகளிலேயே பலாத்கார குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.