ம.பி. முதல்வர் பதவி.. நாளை இரவு க்ளைமாக்ஸ்.. 'கனத்த மவுன'த்துடன் சவுகான் போட்ட ட்வீட்..பரபரத்த பாஜக!
போபால்: மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்த நிலையில் முதல்வர் பதவி தமக்கே அடம்பிடித்து நிற்கும் சிவராஜ் சிங் சவுகான் ட்விட்டரில் 'ராம்-ராம்' என பதிவிட்டது பாஜகவினரிடையே பரபரப்பான விவாத்தை கிளப்பிவிட்டது.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத பெரு வெற்றியை பாஜக அறுவடை செய்து 1 வார காலமாகிவிட்டது. ஆனால் ம.பி. மாநில புதிய முதல்வர் யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் பாஜக மேலிடம் திணறி வருகிறது. பாஜகவின் மத்திய பிரதேச முகமான நீண்டகால முதல்வர் சிவராஜ் சிங் தம்மைத்தான் மேலிடம் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார். இதனால் எந்த ஒரு லாபியும் செய்யாமல் டெல்லிக்கும் போகாமல் 'லோக்சபா தேர்தல்' பணிகளில் படுதீவிரமாக இறங்கி இருப்பது பெரும் புதிராக உள்ளது.

இன்னொரு பக்கம் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், கைலாஷ் விஜயவர்ஜியா உள்ளிட்டோர் முதல்வர் பதவியை கைப்பற்றும் லாபியில் படுதீவிரமாக உள்ளார். இவர்களுடன் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவும் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார். குவாலியர், சம்பல் பிராந்தியத்தில் மொத்தம் உள்ள 34 தொகுதிகளில் 18-ல் வெற்றி பெற காரணமாக இருந்தவர் ஜோதிராதித்யா சிந்தியா. இந்தப் பிராந்தியத்தில் ஜோதிராதித்யாவால் அதிகபட்சம் 12 தொகுதிகளில்தான் ஜெயிக்க வைக்க முடியும் என பாஜக தலைவர்களே கணக்குப் போட்டதை தவிடு பொடியாக்கியவர்.
மத்திய பிரதேச மாநில முதல்வரை தேர்வு செய்வதற்கான மேலிடப் பொறுப்பாளர்களாக ஏற்கனவே ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய ஓபிசி அணி தலைவர் கே.லக்ஷமண், தேசிய செயலாளர் ஆஷா லக்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக எம்.எல்.ஏக்களுடன் மேலிடப் பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தியும் வருகின்றனர்.
இந்த பஞ்சாயத்துகளுக்கு மத்தியில் நாளை திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதேச புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இதனிடையே சிவராஜ் சிங் சவுகான் தமது எக்ஸ் பக்கத்தில், ராம்-ராம் என பதிவிட்டிருக்கிறார். சிவராஜ் சிங் சவுகான் திடீரென ராம்-ராம் என பதிவிட்டிருப்பது எதனை குறிக்கிறது? முதல்வர் பதவி கிடைக்காமல் போனால் கலகக் குரல் எழுப்பப் போகிறாரா? என்கிற விவாதங்களை பாஜகவில் கிளப்பிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications