ம.பி: வம்பாடு பட்டு பாஜகவை ஜெயிக்க வைத்த எனக்கு சிஎம் பதவி இல்லையா? டெல்லிக்கு போக மறுத்த சவுகான்!
போபால்: மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு டெல்லி பாஜக மேலிடம் மீண்டும் முதல்வர் பதவி வழங்காது என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த சிவராஜ் சிங் சவுகான் டெல்லி பாஜக மேலிட ஆலோசனைக் கூட்டத்துக்கு வர முடியாது என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் அசைக்க முடியாத முதல்வர்சிவராஜ் சிங் சவுகான். தற்போதைய சட்டசபை தேர்தலிலும் பாஜக அமோக வெற்றியை அறுவடை செய்திருப்பதில் சிவராஜ் சிங் சவுகானின் பங்களிப்பை மறுத்துவிட முடியாது.

ஆனால் மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பணிகள் தொடங்கப்பட்ட போதே பாஜக மெல்ல மெல்ல சிவராஜ் சிங் சவுகானை ஓரம் கட்டத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் சட்டசபை தேர்தலில் சிவராஜ் சிங் சவுகானுக்கு போட்டியிடக் கூட வாய்ப்பு கிடைக்காது என்ற நிலைமைதான் இருந்தது. சிவராஜ் சிங் சவுகான் பெயரை உச்சரிக்காமலேயே பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
பாஜகவின் இத்தகைய போக்கால் மத்திய பிரதேசத்தில் அந்த கட்சி வரலாறு காணாத பெரும் தோல்வியை சந்திக்கப் போகிறது என அத்தனை கருத்து கணிப்புகளும் ஒரு சேர அலாரம் அடித்தன. இதனால் உஷாராகிப் போன பாஜக மேலிடம் தம்முடைய போக்கை மாற்றிக் கொண்டது. சிவராஜ் சிங் சவுகானுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தது. தேர்தல் பிரசாரத்தில் சிவராஜ் சிங் சவுகானுக்கு முக்கியத்துவம் வந்தது.
இதனால் பாஜக எதிர்பார்த்ததை விட அமோக இடங்கள் கிடைத்தன. மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 இடங்களை அள்ளியது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 66 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. மத்திய பிரதேசத்தில் பாஜக இமாலய வெற்றி பெற்றதற்கு சிவராஜ் சிங் சவுகான் தான் காரணம் என அத்தனை ஊடகங்களும் அடித்துச் சொல்லி வருகின்றன.
இந்த நிலையில் ம.பி. முதல்வராக மீண்டும் சிவராஜ் சிங் சவுகானை அறிவிக்காமல் பாஜக எனும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த டெல்லிக்கு வருமாறு சிவராஜ் சிங் சவுகானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் பட்டே, நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர்தான் டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்புகள் குறித்து கருத்து தெரிவித்த சிவராஜ் சிங் சவுகான் வெறுப்பின் உச்சமாக, நான் ஒருபோதும் முதல்வர் பதவிக்கான போட்டியிலேயே கிடையாது. அதனால் டெல்லிக்கு போக வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு லோக்சபா தேர்தலில் பாஜகவை ஜெயிக்க வைக்க வேண்டிய வேலை இருக்கிறது என தெரிவித்தார்.
ம.பி. பாஜகவில் கலகம் கனன்று கொண்டே இருக்கிறது!












Click it and Unblock the Notifications