எங்கும் காவிமயம்.. காங்கிரஸ் அலுவலகமா இது? மபி தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்த “கை” - என்னாச்சு?
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைமையகம் முழுவதும் காவி கொடிகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு என்ன காரணம்? விரிவாக பார்ப்போம்.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்தது.
ஆனால், 2020 ஆம் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் கமல்நாத் அரசு கவிழ்ந்து மீண்டும் சிவராஜ் சின் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தது.

மத்திய பிரதேச தேர்தல்
இந்த நிலையில், மத்திய பிரதேச பாஜக அரசின் பதவிகாலம் இந்த ஆண்டு இறுதியுடன் நிறைவடைய இருப்பதால், அம்மாநிலம் தேர்தலுக்காக தயாராகி வருகிறது. அங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.

கோயில் அர்ச்சகர் பிரிவு
அந்த வகையில், பாஜகவிற்கு வெற்றியை தேடித் தரும் இந்துத்துவ ஆதரவு வாக்காளர்களை கவரும் வகையில் மத்திய பிரதேச காங்கிரஸ் புதிய யுக்தியை கையில் எடுத்து உள்ளது. அதன்படி மாநில காங்கிரஸ் கட்சியில் கோயில் அர்ச்சகர்கள் பிரிவு என்ற புதிய பிரிவை கமல்நாத் உருவாக்கி உள்ளார். இதற்கு சுதிர் பார்தி என்பவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கோயில் அர்ச்சகர் மாநாடு
இந்த நிலையில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமையகத்தில் காங்கிரஸ் கோயில் அர்ச்சகர்கள் பிரிவின் சார்பில்
"தர்ம சம்வத்" என்ற பெயரில் இந்து மத மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள், ஏராளமான கோயில் அர்ச்சகர்கள், இந்து மத குருக்கள், கோயில் மடாதிபதிகள் என பலர் மாநில முழுவதிலும் இருந்து பங்கேற்றனர்.

காவிமயமான காங்கிரஸ் அலுவலகம்
இந்த மாநாட்டுக்காக காங்கிரஸ் தலைமையகம் முழுவதும் காவி கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த மாநாட்டில் பேசிய கமல்நாத், "இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அர்ச்சகர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுவோம்." என்றார்.

பாஜக குத்தகைக்கு எடுத்துள்ளதா?
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கமல்நாத்திடம், "காங்கிரஸ் கட்சி காவிமயமாகி இருப்பதை குறிப்பதற்காக அலுவலகத்தில் காவி கொடிகள் கட்டப்பட்டு உள்ளதா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல்நாத், "பாஜக காவி நிறத்துக்கு வணிக முத்திரை பெற்று இருக்கிறதா? தாங்கள் இந்து மதத்தை குத்தகைக்கு எடுத்து உள்ளதாக பாஜக கூறுகிறது.

பாஜகவுக்கு ஏன் பயம்?
மத உணர்வுகள் என்பது நம் அனைவருக்கும் உள்ளன. அதை அரசியலில் நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. பாஜகவுக்கு ஏன் நாங்கள் கோயில்களுக்கு சென்றால் அச்சம் வருகிறது. காங்கிரஸ் மாநில தலைமையகத்தில் காவி கொடியை ஏற்றினால் பாஜக அச்சப்படுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications