மெகா மோசடி! முஸ்லீம் பெயரை பயன்படுத்தி நிலத்தை வாங்கி மோசடி.. பின்னணியில் இந்து அமைப்பு.. பரபர தகவல்
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகளிடம் பொய்யான தகவல்களைப் பரப்பி சிலர் ஏமாற்றி நிலத்தை வாங்கியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
நமது நாட்டில் சில பகுதிகளில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே அவ்வப்போது சிறு மோதல்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும், இதைத் தவறாகப் பயன்படுத்த நினைக்கும் சிலர் மக்களிடையே மோசடி செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அப்படியொரு சம்பவம் தான் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் சிலர் உருது பெயரைக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர். அங்கு வாழும் மக்களை ஏமாற்றி இவர்கள் சுமார் 200 ஏக்கர் நிலத்தை வாங்கி, வீட்டுமனையாக மாற்றி விற்பனை செய்து உள்ளனர். உருது பெயரைக் கொண்ட அந்த அமைப்பை உருவாக்கியவர்கள் அங்குள்ள இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இந்து முஸ்லீம் விஷயத்தை வைத்து நிலத்தை வாங்கியதையும் விவசாயிகள் கண்டுபிடித்தனர்.
புகார்
2000களில் தொடக்கத்தில் மத்தியப் பிரதேசம் கார்கோன் புறநகரில் உள்ள நிலத்தை இவர்கள் வாங்கி உள்ளனர். அங்கு விவசாயம் செய்து வந்தவர்களே இந்து முஸ்லீம் மோதல் ஏற்படுமோ என அச்சத்தில் நிலத்தை விற்றுள்ளனர். ஆனால், இப்போது அங்கு மிகப் பெரிய வீட்டுமனையை அவர்கள் கட்டியுள்ளனர். தங்கள் நிலத்தை ஏமாற்றி வாங்கியுள்ளதாகக் கூறி அந்த விவசாயிகள் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர்.
பொய்யான பெயர்
தன்சீம்-இ-சர்கேஸ் என்ற அமைப்பை வைத்தே அவர்கள் நிலங்களை வாங்கி உள்ளனர். அனைத்து நிலத்தையும் வாங்கி முடித்த பின்னர், அந்த அமைப்பின் பெயரைக் கடந்த 2007இல் பேராசிரியர் பிசி மகாராஜன் அறக்கட்டளை என்று மாற்றிக் கொண்டு உள்ளனர். அந்த நிலத்தை நல்ல விஷயங்களுக்காகவே இப்போது பயன்படுத்துவதாக இந்த அறக்கட்டளையின் இயக்குநர் ரவி மகாராஜன் தெரிவித்து உள்ளார்.
விளக்கம்
வீட்டை தவிர அங்கு, கோசலை, பசுக்கள் தங்கும் இடங்களையும் அவர்கள் அங்குக் கட்டி வருகின்றனர். இருப்பினும், தாங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளித்து உள்ளனர். இருந்த போதிலும், இது தொடர்பாக போலீசார் அல்லது அங்குள்ள மாவட்ட நிர்வாகம் எந்தவொரு விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை. முஸ்லீம்களைப் போல தங்களைக் காட்டிக் கொண்டு வந்து நிலத்தை வாங்கிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மோசடி
இது தொடர்பாக விவசாயி நந்தகிஷோர் குஷ்வாஹா கூறுகையில், "2004இல் ஜாகிர் என்பவர் என்னிடம் வந்தார். இங்குள்ள நிலங்களை எல்லாம் அவர்கள் வாங்கிவிட்டதாகத் தெரிவித்தார். அருகே இறைச்சி கூடம் ஒன்று வருவதாகவும் இதனால் இங்கு எப்படியும் அதிகப்படியான இஸ்லாமியர்கள் வருவது உறுதி என்றார். இதனால் நிலத்தை விற்றுவிடுமாறு கூறினார். மொத்தம் ஐந்து ஏக்கர் நிலத்திற்கு அவர் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
பொய் தகவல்
இங்கு ஹஜ் கமிட்டி வர உள்ளதாகவும் இஸ்லாமியர்களின் மயானம் வர உள்ளதாகவும் எல்லாம் கூறினார்கள். இதன் காரணமாகவே இங்குள்ள அனைவரும் நிலத்தை விற்றோம்" என்று அந்த விவசாயி கூறினார். அதாவது கடந்த 2002இல் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் தன்சீம்-இ-சர்கேஸ் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். இவர்கள் தான் ஜாகிர் என்பவரை நிலத்தை வாங்க பணியமர்த்தி உள்ளனர்.
நிலம்
இப்படி பொய்யான தகவல்களைப் பரப்பி அவர்கள் மொத்தம் 200 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளனர். இப்போது அவர்கள் அதே இடத்தில் வீட்டு மனைகளைக் கட்டியுள்ளனர். பல விவசாயிகளிடம் இருந்து இப்படி ஏமாற்றி நிலம் வாங்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் சிங் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெயர் விவகாரம்
இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ரஞ்சித் சிங், "இந்து சமூகத்தினரின் நலனுக்காக நான் உழைப்பதால் பல பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். இங்கு எங்களுக்குக் கோசாலை தேவைப்பட்டது. அது சமூகத்திற்குப் பெரியளவில் உதவும் என்று நினைத்தோம். அமைப்பின் பெயர் தன்சீம்-இ-சர்கேஸ் அல்லது வேறு என்னவாக இருந்தாலும் என்ன பிரச்சினை இது எனக்குப் புரியவில்லை" என்றார்.
பாஜக
அறக்கட்டளை இயக்குநர் ரவி மகாராஜன் மேலும் கூறுகையில், "தன்சீம்-இ-சர்கேஸ் என்றால் தரிசு நிலத்தை வளமான நிலமாக மாற்றுவோம் என்று அர்த்தம். இதன் அர்த்தம் அவர்களுக்குப் புரியவில்லை என்பதாலேயே பெயரை மாற்றினோம்" என்றார். இருப்பினும் இஸ்லாமிய அமைப்பு போன்று வேண்டுமென்ற பெயர் வைத்து ஏமாற்றி உள்ளதாக விவசாயிகள் தங்கள் புகாரில் தெரிவித்து உள்ளனர். மறுபுறம் பாஜக இந்த விஷயத்தில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளது.