தங்க வேட்டையில் இறங்கிய மக்கள்.. இரவில் மொத்தமாக திரண்ட கூட்டம்.. பாலிவுட் படத்தால் வந்த சிக்கல்!
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரில் உள்ள ஆசிர்கர் கோட்டைக்கு நள்ளிரவில் திடீரென டார்ச் லைட், சல்லடைகள், மண்வெட்டிகள் உடன் மக்கள் குவிந்துள்ளனர். திடீரென மொத்தமாகக் குவிந்த மக்கள் மண்ணை தோண்டி எடுக்க ஆரம்பித்தனர். இரவு நேரத்தில் மக்கள் திடீரென இதுபோல திரண்டது ஏன்.. இதற்குப் பின்னணியில் என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக நமது நாட்டில் திரைப்படங்களுக்கு மிகப் பெரிய தாக்கம் இருக்கிறது. படங்களில் ஹீரோ செய்யும் விஷயத்தைப் பார்த்து, அதைப் பின்பற்றும் பலரை நாமே கூட பார்த்து இருப்போம். அப்படியொரு சம்பவம் தான் இப்போது மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. சினிமாவை பார்த்துவிட்டு விடிய விடிய இங்கே மக்கள் மண்ணில் குழி தோண்டி வருகிறார்கள். இது குறித்து நாம் பார்க்கலாம்.

திரண்ட மக்கள்
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரில் உள்ள ஆசிர்கர் கோட்டைக்கு அருகே உள்ள பகுதிகளில் தான் திடீரென மக்கள் இதுபோல மொத்தமாகத் திரண்டுள்ளனர். நள்ளிரவில் திரண்ட அந்த மக்கள் அந்த பகுதியில் குழிகளைத் தோண்டத் தொடங்கியுள்ளனர். எதற்காக இதுபோல செய்கிறார்கள் என விசாரித்த போது தான், அங்குத் தங்கம் இருப்பதாகவும் அதைத் தேடியே வந்துள்ளதாகவும் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதற்காக டார்ச் லைட்டுகள், சல்லடைகள் மற்றும் தங்கத்தைக் கண்டுபிடிக்கும் கருவிகளுடன் மக்கள் அங்குத் திரண்டுள்ளனர்.
ஏன் திடீரென அந்த குறிப்பிட்ட பகுதியில் மக்கள் தங்கத்தைத் தேடுகிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. ஏனென்றால் சமீபத்தில் விக்கி கௌஷல் நடித்திருந்த "சாவா" திரைப்படத்தில் இந்த புர்ஹான்பூர் பகுதியில் ஒரு தங்கச் சுரங்கம் இருந்ததாகக் கூறியிருந்தனர். அதைப் பார்த்த மக்களே இங்குத் தங்கம் கிடைக்கும் என நம்பி தோண்டி வருகிறார்கள்.
தங்கம் & வெள்ளி நாணயங்கள்
மேலும், சமீபத்தில் ஒரு ஜேசிபி இயந்திரம் வேறு ஒரு வேலைக்காக நிலத்தைத் தோண்டிய போது அதில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வதந்தி பரவியது. இதை எல்லாம் உண்மை என நம்பியே அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்களும் தங்கத்தைத் தேட தொடங்கிவிட்டனர். இதன் காரணமாகவே மக்கள் விடிய விடிய நிலத்தைத் தோண்டி வருகிறார்கள்.

இது தொடர்பாக உள்ளூர் மக்கள் கூறுகையில், "தினசரி இரவு நேரத்தில் மக்கள் வந்து தோண்டுவார்கள். பலரும் தங்க வெள்ளி காயின்கள் கிடைத்ததாக சொல்கிறார்கள். நான் இது தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துவிட்டேன். ஆனால், அவர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பது போலத் தெரியவில்லை" என்றார். இருப்பினும், இரவு நேரத்தில் இதுபோல பலரும் மண்ணை தோண்டி எடுப்பது அங்குக் குழப்பத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது.
ட்விஸ்ட் கொடுத்த வரலாற்று ஆய்வாளர்கள்
வரலாற்று ஆய்வாளர்கள் இது குறித்துக் கூறுகையில், "புர்ஹான்பூர் ஒரு காலத்தில் வளமான முகலாய நகரமாகவும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு செழிப்பான நாணயக் கூடமாகவும் இருந்தது. அப்போது போர்க் காலங்களில் எல்லாம் மக்கள் பெரும்பாலும் தங்கள் செல்வத்தைப் பாதுகாப்பாக வைப்பதற்காக நிலத்தடியில் புதைத்து வைத்திருந்தனர். இதனால் இந்த பகுதியில் தங்கம் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், இவர்கள் சொல்வது போல சில அடி ஆழத்தில் எல்லாம் தங்கம் இருக்காது. தீவிர ஆய்வு தேவை. மேலும், வல்லுநர்களின் ஆலோசனை இல்லாமல் இதுபோல இஷ்டத்திற்கு தோண்டினால் நாம் மதிப்புமிக்க பாரம்பரியத்தை இழக்க நேரிடும்" என எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications