மேகி தடையால் தொழிலாளர்கள் பாதிப்பு.. கூலி வேலை செய்தும், டீ விற்றும் வாழ்க்கை நடத்துகிறார்கள்
டெல்லி: மேகி நூடுல்ஸ் உற்பத்தி மையம் மூடப்பட்டுள்ளதால், அதில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, ரிக்ஷா ஓட்டுவது, டீ விற்பனை செய்வது போன்ற தொழில்கள் செய்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே தயாரித்து வரும் மேகி நூடுல்ஸ் குழந்தைகளால் விரும்பி சாப்பிடப்பட்டுவந்தது. இந்நிலையில், மேகியில் அளவுக்கு அதிகமான கெடுதல் விளைவிக்கும் மூலப்பொருள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்ததை தொடர்ந்து, இந்திய அரசு அதற்கு தடை விதித்துள்ளது.
3 மாதங்கள் நீடிக்கும் தடை
சுமார் 3 மாதங்கள் முன்பு நாடு முழுவதும் மேகியின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் உத்தரஹாண்ட் மாநிலத்திலுள்ள ருத்ராபூர் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது.
3 லட்சம் கிலோ
ருத்ராபூர் நகரிலுள்ள மேகி உற்பத்தி பிரிவில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் கிலோ அளவுக்கு மேகி உற்பத்தி நடைபெற்று வந்தது. ஆனால், 3 மாதங்களாக அங்கு ஆலை மூடப்பட்டுள்து.
தொழிலாளர்கள்
ருத்ராபூர் ஆலையில் சுமார் 1100 பணியாளர்கள் வேலை பார்த்து வந்த நிலையில், மேகி தடை அவர்களை வெகுவாக பாதித்துள்ளது. பணியார்களில் பெரும்பாலானோர் ஏழைகள் என்பதால், தங்கள் தினசரி சாப்பாட்டு செலவுக்கு இந்த வேலையை நம்பிதான் இருந்துள்ளனர். தற்போது, அந்த தொழிலாளர்கள் நிலை பரிதாபமானதாக மாறியுள்ளது.
ரிக்ஷா ஓட்டுகிறார்கள்
வேலையிழந்த தொழிலாளர்களில் பலரும், ரிக்ஷா ஓட்டுவது, டீ விற்பனை செய்வது, கட்டிட வேலைக்கு செல்வது என வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். மேகி உற்பத்தி பிரிவில் வேலை பார்த்த 43 வயதான ராஜேந்திர சிங் இதுகுறித்து கூறுகையில், "வாடகைக்கு ரிக்ஷா ஓட்டும் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். மேகி மீதான தடை உரிமையாளர்களை பாதித்ததோ இல்லையோ, அங்கு வேலை பார்க்கும் என்னைப்போன்ற தொழிலாளர்களை பாதித்துவிட்டது" என்றார்.
தற்கொலை
இந்த ஆலையில் வேலை பார்த்த பலரும் ம.பி., உ.பி, பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்தான். மீண்டும் அவர்களில் பலரும் சொந்த மாநிலங்களுக்கே சென்று வேறு ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடிவருகின்றனர். லல்தா பிரசாத் என்ற ஊழியர், விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.