மோசமான அரசியல்வாதிகள் மறைந்து போக வேண்டும்.. பி.சி சர்க்கார் ஆசை

உலகம் முழுவதும் பிரபலமான ஒரு மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்காரின் மகனான பி.சி.சர்க்கார் ஜூனியர். இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பராசத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடவுள்ளார்.
இந்த நிலையில் கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேஜிக் ஷோவில் நாங்கள் பலரையும் காணாமல் போகச் செய்துள்ளோம். அதேபோல நமது நாட்டிலும் மோசமான அரசியல்வாதிகள் அனைவரும் அப்படியே காணாமல் போய் விட வேண்டும்.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நரேந்திர மோடியும், மமதா பானர்ஜியும் இணைவார்கள். இதை நான் உறுதியாக நம்புகிறேன். இது நிச்சயம் நடக்கும். இருவரும் இணைந்து செயல்படுவதை நாம் பார்க்க்ததான் போகிறோம்.
பிரதமராக நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு உதவுவார். மேற்கு வங்க மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல உதவுவார்.
மாஜிக் மூலம் மக்களின் வாக்குகளைக் கவர முடியாது. மாஜிக் என்பது ஒரு மாபெரும் கலை. அது பொழுதுபோக்கு. மக்களைக் கவர வேண்டுமானால் உண்மையான சாதனைகளை நாம் நிகழ்த்த வேண்டும். உண்மையான அற்புதங்களை நிகழ்த்த வேண்டும். அதை விட்டு விட்டு மோசமான மலிவான செயல்களால் மக்களைக் கவர முடியாது.
உண்மையில் மக்கள்தான் நிஜமான அற்புதங்களை நிகழ்த்துபவர்கள் ஆவர். அவர்கள்தான் உண்மையான மாஜிக் நிபுணர்கள். அவர்கள் நினைத்தால் யாரையும் காணாமல் போகச் செய்ய முடியும்.
குஜராத் கலவரத்திற்கு மோடி காரணமல்ல என்பதை நான் திடமாக நம்புகிறேன். அவர் மீது தவறான பழி சுமத்தப்படுகிறது. கற்பனையான குற்றச்சாட்டுக்கள் இவை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications