மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து.. அலறி ஓடிய பக்தர்கள்.. உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் திரண்ட நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து, கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை கோலாகலமாக நடத்துகிறது உத்தர பிரதேச அரசு.

ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை வரை நடைபெறும். பல கோடி பேர் இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில், சாஸ்திரி பாலம் பகுதியில் செக்டார் 19ல் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சமையல் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சுமார் 20 முதல் 25 கூடாரங்கள் எரிந்து நாசமானது. தீ விபத்தால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.
மகா கும்பமேளாவின் செக்டார் 19 இல் 2 சிலிண்டர்கள் வெடித்ததால், முகாம்களில் பெரிய தீ ஏற்பட்டது என அகரா காவல் நிலையப் பொறுப்பாளர் பாஸ்கர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) பணியாளர்களும் களத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications