மும்பை: குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சொன்ன ஐடியா... 2வது முறையாக இளம்பெண் பலாத்காரம்
மும்பை: பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை பிடிப்பதற்காக போலீசார் சொன்ன ஐடியாவை கேட்டு தனியாக போன இளம்பெண் அதே கயவர்களால் இரண்டாவது முறையும் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7 ஆம் தேதியன்று மாலையில் ஜல்னா நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண், தனது நண்பருடன் சேர்ந்து அங்குள்ள நவா சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது, அந்தப்பக்கம் வந்த இரண்டு வாலிபர்கள் அவர்களை வழி மறித்து, பெண்ணுடன் வந்த நண்பரை கடுமையாக தாக்கி அங்கிருந்து விரட்டிவிட்டனர். அந்தப் பெண்ணை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று கத்தி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்தனர். அந்த காட்சிகளை அந்தப் பெண்ணின்
செல்போனிலேயே அவர்கள் வீடியோவாக பதிவும் செய்து வைத்துக்கொண்டனர்.

அந்தக்கயவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்குச் சென்ற அந்த இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். உடனே அந்தப் பெண்ணின் தாயார் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் தாயார் செல்போனை தொடர்ப்பு கொண்ட ஒரு ஆசாமி, உங்கள் மகளின் ஆபாசப்படத்துடனான செல்போன் எங்களிடம் உள்ளது. உடனடியாக நாங்கள் கேட்கும் பணத்தை தந்துவிட்டு அந்த காட்சிகளுடன் கூடிய செல்போனை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறான்.
உடனே அந்த பெண்ணின் தாயார் இந்த விபரத்தை போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து அந்த குற்றவாளிகளை பிடிக்க போலீசார் ஐடியா கூறியுள்ளனர். அதன்படி, தனது தாயிடம் பேசிய அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட அந்த இளம்பெண், பணத்தை எங்கே வந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு, ஜல்னா நகரில் உள்ள ஒரு மேம்பாலம் அருகே காத்திருப்பதாகவும், பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை வாங்கி செல்லுமாறு அவர்கள் கூறி இருக்கிறார்கள்.
இதை கேட்ட போலீசார், இளம்பெண்ணை அங்கே போகச் சொன்னதோடு, மாறுவேடத்தில் பின் தொடர்ந்து வந்து அந்த குற்றவாளிகளை பிடித்து விடுவதாகவும் கூறினர். இதைக்கேட்ட அந்த பெண்ணும் துணிச்சலாக நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் அந்த மேம்பாலத்தை நோக்கி சென்றுள்ளார். ஆனால் அந்த பெண் போகும் வழியிலேயே, இரு வாலிபர்களும் அவரை வழிமறித்து, அருகில் இருந்த புதருக்குள் தூக்கிச் சென்று மறுபடியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தெரியாமல் பாலத்தின் அருகே குற்றவாளிகளை பிடிக்க காத்திருந்த போலீசார் அவர்கள் யாரும் அங்கு வராததால் காவல் நிலையத்திற்கே திரும்பி இருக்கின்றனர். ஆனால் அங்கே இரண்டாவது முறையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் உடல் தளர்ந்த நிலையில் அமர்ந்திருந்தார்.
இதனையடுத்து தீவிரமாக தேடிய போலீசார் குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடம் இருந்த அந்த பெண்ணின் செல்போனையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்ட மராட்டிய மாநில போலீஸ் ஐ.ஜி. விஷ்வாஸ் நக்ரே, அந்த காவல் நிலையத்திற்கு சென்று இந்த சம்பவம் பற்றி விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், அந்த இரண்டு வாலிபர்களையும் பிடிக்க முட்டாள் தனமாக ஐடியா கொடுத்த உதவி இன்ஸ்பெக்டர் வினோத் எஜாப்வர் என்பவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications