விலையை கேட்டு நாம் பதறினா.. தமிழகம், மகா. உட்பட 10 மாநிலங்களில் 35,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல்
மும்பை: தமிழகம், மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில் மொத்தம் 35,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகராஷ்டிராவில் மட்டும் 23,340 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருப்புகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருன்றன.
அண்மையில் ஆந்திரா உட்பட 5 மாநிலங்களில் பதுக்கல் பேர்வழிகளிடம் இருந்து 5,800 டன் பருப்பை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. மேலும் கர்நாடகா, தமிழகத்தில் பதுக்கல்காரர்களின் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 276 இடங்களில் நுகர்வோர் வுிவகாரங்கள் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பதுக்கல்காரர்களிடமிருந்து சுமார் 23,340 டன் துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 35,000 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 29 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு இந்த பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மும்பையில் 1 கிலோ துவரம் பருப்பு விலை ரூ.3 குறைந்து ரூ.175 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மும்பை, தானே, பான்வல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பெரிய குடோன்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின் பயனாக, சந்தையில் பருப்பு விநியோகம் சீராகி, விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications