மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்... பிரசார பீரங்கிகளான சமூக வலைதளங்கள்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக வலைதளம் மூலமான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
லோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களை முழு அளவில் பயன்படுத்தி வெற்றியும் கண்டது பாரதிய ஜனதா கட்சி. தற்போது 288 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவுக்கு வரும் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

பாஜக பார்முலா
பாஜகவின் பார்முலாவை பின்பற்றி மகாராஷ்டிராவில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக வலைதளங்களில் பிரசாரத்தை முன்னெடுப்பதில் மும்முரம் காட்டுகின்றன. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முதன்மை ஊடக ஒருங்கிணைப்பாளர் ரவிகாந்த் கூறுகையில், இளைஞர்களை சென்றடைய சமூக வலைதளங்களே சரியான வழிமுறை. இதனால்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறோம் என்றார்.

வேட்பாளர்களே களத்தில்..
இதற்கு தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று பாஜக களத்தில் நிற்கிறது... இளம் வாக்காளர்களைக் குறிவைத்து தொடர்ந்து பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் அதுல்ஷா, வாட்ஸ் அப். ஃபேஸ்புக் ஆகியவற்றை எங்களது வேட்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். அதன் மூலமாக தீவிரமன பிரசாரத்தை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

கோதாவில் காங்கிரஸும்..
இந்த ஒரு கட்சிகளைப் போல காங்கிரஸும் சமூகவலைதளம் எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது. மகாராஷ்டிராவின் 58 மாவட்ட அலுவலகங்களும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ட்விட்டர், யு டியூப் ஆகியவற்றையும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரசார ஆயுதமாக்கி வருகின்றனர்.

பிரசார பீரங்கிகள்
நடப்பு மகாராஷ்டிரா தேர்தலில் மைக், போஸ்டர்களைக் காட்டிலும் சமூக வலைதளங்களே "பிரசார பீரங்கி"களாக வலம் வருகின்றன!












Click it and Unblock the Notifications