மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி- பாஜகவுடனான கூட்டணிக்கு சிவசேனா ஒப்புதல் தெரிவித்தது!
மும்பை: மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதாவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க சிவசேனா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு புதிய கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காத பாஜக தனது பழைய நட்பு கட்சியான சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா தூதர்களான அனில்தேசாய் எம்.பி, மூத்த தலைவர் சுபாஷ்தேசாய் ஆகியோர் டெல்லி சென்று பாஜக மேலிட தலைவர்களுடன் பேச்சு நடத்திவிட்டு மும்பை திரும்பினர்.
பின்னர் மும்பையில் சுபாஷ் தேசாய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தயாராக இருக்கிறோம். இதுதொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை சாதகமான நிலையில் உள்ளது. முறையான பேச்சுவார்த்தை திங்கட்கிழமை தொடங்கும்.
தற்போதைக்கு பாஜகவிடம் நாங்கள் எந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக மட்டும் முடிவு செய்து இருக்கிறோம்.
முறையான பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பா.ஜனதா தலைவர்களுடன் கலந்து பேசுவது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு சுபாஷ் தேசாய் கூறினார்.