மோடி அன்று சொன்ன ஒரு வார்த்தை.. மறுநாளே நடந்த சந்திப்பு.. சரத் பவாருக்கு ஷாக் தந்த நிமிடங்கள்!
பிரதமர் மோடி ராஜ்யசபாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து பேசியதற்கான உண்மையான காரணம் தற்போது வெளி வந்துவிட்டதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
மும்பை: பிரதமர் மோடி ராஜ்யசபாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து பேசியதற்கான உண்மையான காரணம் தற்போது வெளி வந்துவிட்டதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நேற்று முதல்நாள் இரவு வரை மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில்தான் ஆட்சி அமையும் சூழ்நிலை இருந்தது. அங்கு நேற்று காலை சிவசேனா ஆட்சி அமைக்க திட்டமிட்டு இருந்தது. இவர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்எல்எக்களின் ஆதரவும் இருந்தது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவிற்கு ஆதரவு தந்தார். இதன் மூலம் மகாராஷ்டிரா முதல்வராக நேற்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றார்.
மெஜாரிட்டி கிடைப்பது கஷ்டம்.. அஜித் பவாரை நம்பி அகலக் கால் வைத்த பாஜக.. உண்மை பின்னணி இதுதான்!
என்ன பேசினார்
இந்த நிலையில்தான் தற்போது பிரதமர் மோடியின் ராஜ்ய சபா உரை பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கடந்த திங்கள் கிழமை பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசினார்.அப்போது அவர் தேசியவாத காங்கிரசை புகழ்ந்து பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தனது பேச்சில், இன்று நான் இரண்டு கட்சிகளை பாராட்ட விரும்புகிறேன். தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளை நான் இங்கு பாராட்ட விரும்புகிறேன்.
விதிப்படி
அவர்கள் எப்போதும் விதிப்படி சிறப்பாக நடந்து இருக்கிறார்கள். பாராளுமன்ற விதிகளை பின்பற்றி அவர்கள் சிறப்பாக நடந்து உள்ளனர். பாராளுமன்ற ஒழுக்கத்தை, மரபை அவர்கள் மீறியது கிடையாது. எப்போதும் அவர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டது கிடையாது.
ஆனால் இரண்டு கொள்கை
ஆனாலும் கூட இரண்டு கட்சியினரும் தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்துள்ளனர். தங்கள் நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருந்து இருக்கிறார்கள். அவர்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பாஜக கட்சியும் அவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அட பாராட்டு
ஆனால் இந்த பாராட்டு அதோடு முடியவில்லை. அதற்கு மறுநாளுக்கும் மறுநாளே பிரதமர் மோடி டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடன் சந்திப்பு நடத்தினார். பிரதமர் மோடி கூட்டணி குறித்து சரத் பவார் உடன் தனியாக பேசுவார். பாஜக பக்கம் தேசியவாத காங்கிரசை இழுக்க அவர் முயற்சிப்பார் என்று செய்திகள் வந்தது.
சந்திப்பு பின்னணி
இதனால் எல்லோரும் பிரதமர் மோடி சரத் பவாரை எப்படியாவது இழுத்துவிடுவார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அஜித் பவார் மூலம் பாஜக கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று சரத் பவார் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்.
கவனத்தை திசை திருப்ப
இதனால்தான் மோடி ராஜ்ய சபாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாராட்டினாரா? அவரின் பார்வை எல்லாம் அஜித் பவார் மீதுதான் இருந்துள்ளது. அதை தேசியவாத காங்கிரஸ் கவனிக்கவில்லை என்று கூறுகிறார்கள். கட்சியினரின் கவனத்தை திசை திருப்பவே அவர் சரத் பவாரை நேரில் சந்தித்தார். அதில் தற்போது பாஜக வெற்றியும் பெற்றுள்ளது, என்றும் பேசிக்கொள்கிறார்கள்.