தென் மும்பையில் உள்ள பிரபல கிராபோர்ட் மார்க்கெட்டில் பயங்கர தீ: 60 கடைகள் எரிந்து நாசம்
மும்பை: தெற்கு மும்பையில் உள்ள பிரபல கிராபோர்ட் மார்க்கெட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 கடைகள் எரிந்து நாசமாகின.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தென் பகுதியில் உள்ளது பிரபல கிராபோர்ட் மார்க்கெட். எப்பொழுதும் மக்கள் கூட்டம் அலைமோதும் அந்த மார்க்கெட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இன்று காலை 5.23 மணிக்கு எங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசிய போது கிராபோர்ட் மார்க்கெட்டில் தீ விபத்து என்று தெரிவித்தனர். இதையடுத்து 10 வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் மார்க்கெட்டில் இருந்த 60 கடைகள் எரிந்து நாசமாகின. அவை அனைத்தும் வாசனை திரவியங்கள், பேக்கிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகும் என்றார்.
முனிசிபால் கமிஷனர் அஜோய் மேத்தா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அங்கு கூடிய மக்களை கலைந்து செல்லுமாறு அவர் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்ரபதி சிவாஜி முனையம் அருகே இந்த மார்க்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications