சிந்துவின் சாதனையை 'அசிங்கப்படுத்திய' மலையாள இயக்குநர் மீது நடவடிக்கை பாயுமா?
திருவனந்தபுரம்: இந்திய நாடே, பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றதை கொண்டாடி வரும் நிலையில், மலையாள திரைப்பட இயக்குநர் ஒருவர், சிந்துவின் சாதனையில் காரி உமிழ்ந்தால் என்ன? என்று கேட்டுள்ளார். இதற்கு வலுவான கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்திய மகளிர் பேட்மின்டன் வரலாற்றிலேயே முதல் முறையாக, பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று சாதித்தார். அவரை நாடே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. பரிசுகள் குவிகின்றன. ஆந்திர, தெலுங்கானா அரசுகள் போட்டி போட்டு அவரை கொண்டாடுகின்றன.
இந்த ஒலிம்பிக்கில், இந்தியா மொத்தம் வென்றதே இரு பதக்கங்கள்தான். அதில் சிந்து அதிகபட்சமாக வெள்ளி வென்று அசத்தினார். மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார்.
ஜிம்னாஸ்டிக்கில் தீபா கர்மாகர், இறுதி போட்டி வரை முன்னேறி அசத்தினாலும், நூலிழையில் வெற்றியை தவறவிட்டு, 4வது இடம் பிடித்தார். பிற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. மகளிர் கோல்ப் ஆட்டத்தில் அதிதி அசோக் இறுதி சுற்றுவரை முன்னேறியபோதிலும், 40வது இடமே பிடித்தார்.
நிலைமை இப்படி இருப்பதால் சிந்து இந்திய விளையாட்டு ரசிகர்களின் செல்ல பிள்ளையாக மாறியுள்ளார். ஆனால் மலையாள இயக்குநரோ சிந்துவை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் கருத்து கூறியுள்ளார்.
அந்த இயக்குநர் பெயர் சனல்குமார் சசிதரன். இவர், Ozhivu Divasathe Kali என்ற திரைப்படத்தை கடந்த ஆண்டு இயக்கியிருந்தார். இந்த படம் கேரள அரசின் விமர்சன குழு வரவேற்பை பெற்றது.
சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த ஒலிக்கோர்வை ஆகிய பிரிவுகளில் இப்படம் கேரள மாநில அரசின் விருதை தட்டிச் சென்றது. இப்படி புகழ்பெற்ற இயக்குநரான சனல்குமார், தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
"எல்லோருமே சிந்துவின் சாதனையை கொண்டாடுகிறார்கள். நான் அந்த சாதனையில் காறி துப்பினால் என்னவாகும்? இதை பெரிதாக கொண்டாட என்ன இருக்கிறது?" இவ்வாறு சனல்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சாக்ஷி மாலிக் குறித்து பேஸ்புக்கில் அவமானகர கருத்து கூறிய உத்தரபிரதேச நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்ததை போல சனல்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.