காலில் கட்டு, வாடிய முகம்... வீல் சேரில் அமர்ந்தபடி... மருத்துவமனையில் இருந்து திரும்பிய மம்தா!
கொல்கத்தா: கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மம்தா பானர்ஜி, நேற்றிரவு வீடு திரும்பினார்.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் நந்திகிராம் தொகுதி முக்கியமானதாக மாறியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் ஐக்கியமான சுவேந்து அதிகாரி இங்கிருந்துதான் போட்டியிடுகிறார்.
அதேபோல மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அவரை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் களமிறங்குகிறார். இதற்காகக் கடந்த புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மம்தா காயம்
அன்று மாலையே மம்தா தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது, திடீரென்று காலில் காயமடைந்த மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மக்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அங்கு நான்கு முதல் ஐந்து பேர் வந்ததாகவும், அவர்கள் வேண்டுமென்றே கார் கதவை அடித்துச் சாத்தியதில் தான் காயமடைந்தாகவும் மம்தா தெரிவித்திருந்தார்.
வைரல் வீடியோ
முதலில் நந்திகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கொல்கத்தாவிலுள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்குக் காலில் கட்டுடன், மம்தா சிகிச்சை பெற்று வரும் புகைப்படமும் வீடியோவும் வெளியாகி வைரலானது. அதில் தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட மம்தா பானர்ஜி, விரைவில் பிரசாரத்திற்கு திரும்புவேன் என்றும் இருந்தாலும் வீல் சேரில் அமர்ந்து பிரசாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் உருக்கமாகப் பேசியிருந்தார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
கடந்த இரண்டு நாட்களாக கொல்கத்தாவிலுள்ள மருத்துவமனையில் மம்தா பானர்ஜி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் மருத்துவமனையிலிருந்து விடு திரும்பினார். வீல் சாரில் அமர்ந்தபடி, மம்தா பானர்ஜி மருத்துவமனையிலிருந்து திரும்பவும் வீடியோ வெளியாகியுள்ளது. அவரை மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் வைத்திருக்க முடிவு செய்ததாகவும் இருப்பினும் தேர்தல் காரணமாக மம்தா விரைவாக டிஸ்சார்ஜ் செய்யும்படி கோரிக்கை விடுத்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீண்டும் மருத்துவ சோதனை
இது குறித்து மருத்துவமனை தரப்பில் மேலும் கூறுகையில், "சிகிச்சைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்தார். அவருக்குக் கணுக்காலில் ஏற்பட்ட காயம் விரைவாகக் குணமடைந்து வருகிறது. அடுத்த வாரம் அவருக்கு மீண்டும் மருத்துவ சோதனை நடத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மம்தா பானர்ஜி அரசியல் லாபத்திற்காகப் பொய் கூறுவதாக விமர்சித்துள்ளன.