‘நான் கூறியதை திரித்து பரப்புகிறார்கள்’ - பெண்கள் சர்ச்சை கருத்துக்கு மம்தா பானர்ஜி விளக்கம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, மாணவி நள்ளிரவு 12.30க்கு எப்படி வெளியில் வந்தார். பெண்கள் நள்ளிரவு வெளியில் வருவதற்கு அனுமதிக்க கூடாது என கூறியிருந்தார். அவரின் கருத்து சர்ச்சையானது. எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், மம்தா தன்னுடைய கருத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. மேற்கு வங்கம் மாநிலத்திலும் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். ஏற்கனவே கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனையில் கடந்த வருடம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே மேற்கு வங்கம் மாநிலத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மாணவி கூட்டு பாலியல்
மேற்கு வங்கம் துர்காபூரில் எம்பிபிஎஸ் படித்து வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு 5 பேர் கொண்ட கொடூர கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்தை பற்றிய தகவல்கள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி வருவதையே இந்த சம்பவம் காட்டுவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, "இந்த சம்பவம் நள்ளிரவு காட்டுப் பகுதியில் நடந்துள்ளது. அங்கு என்ன நடந்தது என்று விசாரித்து வருகிறோம். மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மாணவிகள் பாதுகாப்பிற்கு கல்லூரி நிர்வாகமும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்கள் இரவு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் மற்ற மாநிலங்களிலும் நடக்கின்றன." என்று கூறியிருந்தார்.
மம்தா பானர்ஜி சர்ச்சை
பெண்கள் இரவு நேரத்தில் வெளியே செல்லக் கூடாது என்று மம்தா கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து பாஜக முன்னாள் எம்பி லாக்கெட் சாட்டர்ஜி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி நடத்துகிறார்களா அல்லது தாலிபன் தீவிரவாதிகள் ஆட்சி நடத்துகிறார்களா என்று தெரியவில்லை. ஆபரேஷன்ச சிந்தூரில் ராணுவ வீராங்கனைகள் இரவு நேரத்தில் தான் போர் புரிந்தனர். முதல்வரே பெண்களை வெளியில் வர வேண்டாம் என்று சொல்லும் பாதுகாப்பற்ற நிலை தான் மேற்கு வங்கத்தில் நிலவுகிறது என்றார்.
இது சர்ச்சையான நிலையில் மம்தா பானர்ஜி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விவகாரத்தில் ஊடகங்கள் அரசியல் செய்ய் வேணடாம். நான் கூறியதை திட்டமிட்டு திரித்து பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சிகளும் மலிவான அரசியல் செய்து வருகிறார்கள். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications