''மக்கள் சொன்னால் ராஜினாமா செய்கிறேன்; நீங்க வெளியேற ரெடியா இருங்க'' மம்தாவுக்கு, அமித்ஷா பதிலடி!
கொல்கத்தா: மேற்கு வங்க துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் மூண்டன.

மேற்கு வங்கத்தில் வன்முறை
கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை மூண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இதனையடுத்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

மம்தா குற்றச்சாட்டு
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்(சி.ஐ.எஸ்.எஃப்) தான் இந்த படுகொலையை நிகழ்த்தியதாக மம்தா பானர்ஜி நேரடியாக குற்றம் சாட்டினார். இதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மம்தா அதிரடியாக கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் வன்முறை தீயை தூண்டி விட்டு குளிர்காய்கிறார் என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

தேர்தல் ஆணையம் விளக்கம்
உள்ளூர் மக்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை (சி.ஐ.எஸ்.எஃப்) தாக்கியதால், சி.ஐ.எஸ்.எஃப் படையினர் வேறுவழியின்றி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. மேலும், கூச் பிகார் மாவட்டத்தில் 72 மணி நேரத்துக்கு அரசியல் கட்சியினர் யாரும் நுழையக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

அமித்ஷா பதிலடி
இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்கம் பசிர்ஹத் தக்ஷினில் பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா கூறியதாவது:- அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று தீதி(மம்தா பானர்ஜி) மீண்டும் மீண்டும் கூறுகிறார். தீதி அவர்களே மக்கள் என்னை ராஜினாமா செய்யச் சொல்லும்போது, நான் ராஜினாமா செய்வேன். ஆனால் மே 2 அன்று நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அதற்கு நீங்கள் தயாராக வேண்டும்.

பிரியாவிடை கொடுங்கள்
நான் இங்கு வந்து ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். தீதி 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். அவருக்கு ஒரு சிறிய பிரியாவிடை வழங்குவது நன்றாக இருக்குமா? எனவே நீங்கள்(மக்கள்) பாஜகவுக்கு 200 இடங்களைக் கொடுத்து அவருக்கு சிறப்பான பிரியா விடை அளிக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications